அது
1950 வருடங்களில் நிக்ழ்ந்த சம்பவம்..
டாக்டர் அப்துல் கலாம்
அது 1950 வருடங்களில் நிக்ழ்ந்த
சம்பவம்.. தமிழ்நாடு முழுவதும் சூராவளியாகப் பயணம் செய்து மக்களைத்
தன்னுடைய சாதுர்யமான பேச்சினால் கவர்ந்து கொண்டிருந்தார் அண்ணா.
அவருடைய எரிதழலும் தென்றல் காற்றும் கலந்த அறிவார்ந்த பேச்சு மக்களிடையே
ஒரு பெரிய எழுச்சியையே ஏற்படுத்திக் கொண்டிருந்தது. இராமநாதபுரம்
ஸ்வார்ட்ஸ் பள்ளி மாணவர்களாகிய நாங்களும் மகுடிக்கு அடங்கிய பாம்புபோல்
அந்த வசீகரப் பேச்சில் கட்டுண்டு கிடந்தோம்.
அவரை எப்படியாவது எங்களுடைய பள்ளி விழாவுக்கு அழைத்து வந்து பேச
வைக்க வேண்டும் என்கிற ஆசை தணியாத தாகமாய் மாறியது. இரு நாள் நானும்
சக மாணவர்கள் சிலரும் சென்னைக்கு ரயில் ஏறி விட்டோம். அறிஞர் அண்ணாவின்
வீட்டைக் கண்டுபிடித்து அவரைச் சந்தித்தும் விட்டோம். மிக
எளிமையான வீட்டில் ரொம்ப சிம்பிளாக இருந்த அந்த மாபெரும் தலைவரை
முதல் முதலாகப் பார்த்த போது எனக்கு வியப்பில் மூச்சடைத்தது. இவரா
மேடைகளில் புயல் கிளப்பும் பேச்சுக்களை அனல் பறக்க விடுபவர் என்கிற
எண்ணம் ஏற்பட்டது.
ஆனால் அந்த கரகரப்பான மயக்கும் குரல் அருகில் ஒலித்ததை நான் நம்ப
முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். கைலி, கை வைத்த பனியன் மற்றும்
ஷேவ் செய்யாத முகத்துடன் இருந்த அண்ணா, 'இப்போதைக்கு என்னால் அங்கே
வர முடியாது' என்று சொன்னதும் எங்களுக்கு ஏமாற்றமாக இருந்தது.
ஆனாலும் நாங்கள் விடாப்பிடியாக
'கண்டிப்பாக வந்தே ஆகவேண்டும்' என்று பிடிவாதம் பிடித்தோம். மெலிதாகப்
புன்னகை புரிந்த அவர் 'சரி, திருவையாருக்குச் சுற்றுப்பயணம் வரும்போது
உங்கள் பள்ளிக்கு அவசியம் வருகிறேன்' என்று உறுதி மொழி அளித்து
எங்களை அனுப்பி வைத்தார். நாங்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
திரும்பும் வழி எங்கும் அண்ணா எங்கள் பள்ளிக்கு வந்து பேசுவது
போன்ற கனவுகளே வந்து கொண்டிருந்தன. இங்கே சிக்கல் ஒன்று இருந்தது.
நாங்கள் சென்னைக்குக் கிளம்பி வந்து அண்ணா அவர்களைப் பார்த்ததோ
அவர் எங்கள் பள்ளிக்கு வர ஒப்புக்கொண்டதோ எங்கள் பள்ளித் தலைமை
ஆசிரியருக்குத் தெரியாது. அன்றிருந்த திராவிட இயக்க அரசியல் பற்றி
ஒவ்வொருவருக்கும் ஒரு கருத்து இருந்தது. தலைமை ஆசிரியருக்குத்
தெரிந்தால் திட்டுவார் என்று பயந்து அவரிடம் இந்த விஷயத்தை மறைத்து
விட்டோம்.
அண்ணாவிடமிருந்து ஒருநாள் நான் இந்த தேதியில் பள்ளிக்கு வருகிறேன்
என்கிற தகவல் வந்ததும் நாங்கள் புளகாங்கிதம் அடைந்தோம். இனிமேலும்
தலைமை ஆசிரியரிடம் மறைக்க முடியாது என்கிற சூழ்நிலையில் அவரிடம்
தயங்கித் தயங்கி விஷயத்தைப் போட்டு உடைத்தோம். கடுங்கோபம் கொண்ட
அவர் தன்னிடம் கேட்காமல் எப்படி அவரை அழைக்கலாம் என்று கேட்டு
ஆகாயத்துக்கும் பூமிக்கும் குதித்தார். அவரை மெல்ல மெல்ல ஆசுவாசப்
படுத்தினோம். கடைசியில் ஒப்புக்கொண்டார்.
அண்ணாவை வரவேற்பதற்கான கோலாகலமான ஏற்பாடுகளைச் செய்தோம். இராமநாதபுரம்
மாவட்டமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அண்ணாவும் எங்கள் பள்ளிக்கு
வருகை தந்தார். அருமையான உரையை நிகழ்த்தினார். மேடைப் பேச்சில்
அவருடைய அணுகுமுறை மிகவும் வித்தியாசமானது. அன்று எங்கள் பள்ளி
மேடையில் ஏறிய அவர் மாணவர்களாகிய எங்களைப் பார்த்து 'நான் எந்த
தலைப்பில் பேச வேண்டும் என்று சொல்லுங்கள் அதில் பேசுகிறேன்' என்றார்.
ஒரு கணம் நாங்கள் திகைத்துப் போனோம். எங்களுக்குள் அவசர அவசரமாக
பேசி முடிவெடுத்து 'நதிகள்' என்கிற தலைப்பில் பேசுமாறு வேண்டினோம்.
மடை திறந்த வெள்ளம் போல் அந்தத் தலைப்பில் பேச ஆரம்பித்தார் அறிஞர்
அண்ணா. மனித
வரலாற்றில் ஐயாயிரம் வருடங்களுக்கும் மேலாக நதிகள் எப்படி மனித
நாகரிகத்தை மேம்படுத்தின என்பதில் ஆரம்பித்து, இந்திய நாகரீக வளர்ச்சியில்
நதிகளின் பங்கு, மற்றும் மேற்கு நாடுகளான சுவிட்ஸர்லாந்து, ஜெர்மனி,
இங்கிலாந்து அமெரிக்கா முதலியவற்றில் நதி நீர் எவ்வளவு அற்புதமாகப்
பயன்படுத்தப்படுகிறது என்பது வரை சுமார் ஒன்றரை மணிநேரம் தேனருவி
போன்ற பேச்சை அளித்தார். நாங்கள் மெய்மறந்து
கேட்டுக்கொண்டிருந்தோம். நதிகளின் முக்கியத்துவம் பற்றி அப்போது
அவர் பேசிய பேச்சு என் மனதில் பசுமரத்தாணிபோல் பதிந்தது.
இன்றைக்கும் நான் பேசும் பல கூட்டங்களிலும் எழுதும் கட்டுரைகளிலும்
நதி நீர் இணைப்பின் முக்கியத்துவம் பற்றிச் சொல்வதற்கு அந்தப்
பேச்சு ஒரு ஆரம்ப விதை என்றே சொல்லலாம்.
ஐம்பது வருடங்களுக்கு முன்னால்
அந்த தீர்க்கதரிசி பேசியது இன்று நிறைவேறக்கூடிய ஒரு சூழ்நிலை
மெதுவாகக் கனிந்து வருகிறது. தீர்க்கதரிசிகள்
பலரின் கனவுகள் பலிக்கும்போது அவர்கள் இருப்பதில்லை என்பது வரலாற்றில்
சோகமான நடப்பு.
நமது நாட்டில் அண்டுதோரும் 1500 பி எம் சி நதிநீர் .........