சிறப்புக் கட்டுரைகள்

அண்ணா போற்றிய பெருமக்கள் வரிசையில் - 5
உரிமைக்குப் போராடிய வீரன் எடியன் டோலட்!

பேரறிஞர் அண்ணா
(திராவிடநாடு)

அயர்ந்து கிடக்கும் ஒரு நாட்டை, தங்கள் வலிமையை மறந்து கிடக்கும் ஒரு நாட்டு மக்களை, அந்நாட்டின் சாரமற்ற மக்கட் சமூகத்தைத் தட்டி எழுப்புபவன் உயிருள்ள பேச்சு; வீரமுள்ள வார்த்தைகள்; உள்ளம் உருகி, உணர்ச்சி மிகுந்து பேசும் உண்மை வீரனின், மக்கள் மனதை மருட்சி கொள்ளும் சொற்பொழிவு. இது சுதந்திரத்தின் முதற்படி. அடுத்துள்ளது, அத்தகைய வீரனின் ஆழ்ந்த கருத்துக்களை அடுக்கிக்காட்டும் எழுத்துரிமை. அடிமைத்தனத்தில் ஆழ்ந்து கிடக்கும் தன் நாட்டு மக்களைத் தட்டி எழுப்பப் பேச்சு - எழுத்துச் சுதந்திரங்களைக் கோருகிறான், அந்நாட்டின் விடுதலை வீரன். பேச்சு மூலமாகவோ எழுத்து மூலமாகவோ தனது விடுதலை வேட்கையை வெளியிட விரும்புகிறான், வேறொருவரின் அடிமையை அகற்ற விரும்பும் அறிவு வீரன். ஆனால் அவை இரண்டும் ஆளும் வர்க்கத்தாரால் பூட்டிடப்படுமானால் அதையும் மீறுகிறான். மீறியதினால் ஏற்படும் ஆளுவோரின் மிருகத் தண்டனையையும், மிகமகிழ்ச்சியுடன் வரவேற்பான் வைரமனம் கொண்ட சுதந்தர வீரன்.

இத்தகைய வீரர்கள் எத்தனையோ பேர் இருந்து மடிந்தார்கள் இந்நில உலகில். அவர்களில் தலையாய் நின்றோன், இன்றும் பிரான்ஸ் நாட்டு மக்களின் மனதில் மறைந்திருக்கும் வீரன்தான் 'எடியன் டோலட்' என்பான். உயிரை வேண்டுமானால் விட்டுவிடும் தன்மையன். எடுத்த காரியத்தை முடிப்பான் வேண்டி, செயலில் அவ்வளவு பிடிவாதம் கொண்டவன். 15, 16ம் நூற்றாண்டுகளில்தான் மேல் நாடுகளில் கல்வி பரவ ஆரம்பித்தது என்பதை எவரும் அறிவார்கள். அத்தகைய புதிய ஒளி பரவி வந்த சமயமும் இந்த வீரன் வாழ்ந்த காலமும் ஒன்றுபட்டிருந்தன. பிரான்ஸ் நாட்டில் மக்கள் புத்தகங்களைப் புரட்டிப் படிக்கப் புரப்பட்டார்கள். அதே சமயத்தில்தான் கிறிஸ்துவ மதப் புரட்சியை அல்ல சீர்திருத்த உணர்ச்சியை ஊட்ட அரும்பாடுபட்டார் மார்டின் லூதர்.

இத்தகைய சந்தர்ப்பத்தில் பிறந்தான் பிரான்ஸ் நாட்டில் டோலட் எழுத்துரிமைப் போர்வீரன். அவ்வுரிமைக்கே வருந்தி உழைத்தான். வாழ்வைப் பலியிட்டான், அவ்வுரிமைப் போராட்டப் பொற்பீடத்திலே.

இவனுடைய தாய் தந்தையர் யார் என்பதையோ பிறந்த ஊர் நாள் என்ன என்பதையோ அறிய முடியவில்லை. எப்படியோ சிறு வயதில் லத்தீன் பொழியைக் கற்பதில் கவலை கொண்டான். சமய நூல்களை ஆராய்வதிலும் மிக்க ஆரவங்காட்டித்தான் வந்துள்ளான். 17வது வயதில் மதுவா என்னுமிடத்திலுள்ள இத்தாலிய சர்வகலாசாலையில் சேர்ந்து பயின்றான். இங்கு 4 ஆண்டுகள்தான் பயின்றான். ஆனால் அவனுடைய அறிவுமிளிர்ச்சி அவனை உயர்த்திவிட்டது உத்தியோகப் படிப்புக்கு. முதலில் பிரான்ஸ் நாட்டின் பிரதிநிதியாகக் கிரேக்க நாட்டிற்குச் சென்ற லிமோகஸ் பாதிரியாரின் அந்தரங்கக் காரியதரிசியாக நியமனம் பெற்றுப் புறப்பட்டான். அந்தச் சமயம் அவனுடைய வயதோ 21. அங்கு சென்று அறிவைப் பெருக்க ஆர்வங் கொண்டான். பண்டிதர் ஒருவரின் பிரசங்கத்தைத் தொடர்ந்து கேட்டான். அறிவைப் பெருக்கிக் கொண்டான்.

அதோடு நின்றுவிடவில்லை அவ்வீரன். சட்டப் படிப்பில் தேற வேண்டுமென்ற எண்ணம் எழுந்தது. டொலவுச் என்ற லண்டன் நகரின் சிறந்த இடத்தில் இருந்து கற்கக் கருத்துக் கொண்டான். சொந்த ஊரை அடைந்தான். சேர்ந்தான் சட்ட கலாசாலையில். உடனே ஆரம்பித்தன இவனது எதிர்பாராத் தொல்லைகள். அந்தக் கலாசாலையில் ஏராளமான மாணவர்கள் எல்லா நாடுகளிலிருந்தும் வந்து பயின்றார்கள். ஒவ்வொரு நாட்டு மாணவர்களும் வெவ்வேறாகப் பிரிக்கப்பட்டிருந்தார்கள். அவரவர்கள் அவர்கள் நாட்டுக் கொடிகளை வணங்கி, அவரவர்களின் மதகுரு தினத்தை வெகு சிறப்பாகக் கொண்டாடி வந்தார்கள். இந்தப் பைத்தியம் பலம் கொண்டது. அதிக ஆடம்பரத்துடன் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தார்கள் அந்த விழா நாட்களில். மிகவும் தொல்லையாக இருந்தது ஆசிரியர்களுக்கும் அவர்களுக்கு மேலுள்ள அரசாங்க அதிகார வர்க்கத்திற்கும். உடனே ஆரம்பித்தது அரசாங்கம், தனது அடக்குமுறையை வீச. மேற்படி விழாக்கள் சம்பந்தமான கூட்டங்கள் கூடக் கூடாதென்று உத்தரவிட்டது. அதுபற்றிய பிரசுரங்கள் புத்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பார்த்தனர் மாணவர்கள். ஒன்று திரண்டனர், உத்தரவை மீற உறுதியும் செய்தனர். இந்தக் கிளர்ச்சியை உச்சியிலிருந்து நடத்த ஒப்புக்கொண்டான் நமது டோலட். கேட்க வேண்டுமா, அன்றைய எதேச்சாதிகார அரசாங்கத்தின் எடுபிடிகள் இவனை எழுதிக் கொண்டார்கள், அரசாங்கத்திற்கு ஆழமான விரோதி என்று.

இன்றுள்ள ஜனநாயகக்காரர்களின் சரியற்ற காரியங்களைக் கண்டவர்கள், அன்றைய ஏகபோக அதிகாரம் ஓச்சிவந்த இனத்தவரின் இத்தகைய செயலைக்கண்டு சிறிதும் சினங்கொள்ளார். இதற்குத் துணையாக எதிர்பாராத சம்பவம் ஒன்று ஏற்பட்டது. ஒரு நாள் தெருவில் சென்று கொண்டிருந்த யாரோ சிலர் டோலட்டை தாக்கினார்கள். எதிர்பாராத தாக்குதலில் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளக் கருததுக் கொண்ட டோலட், எதிரியை இடித்தான். எக்கச்சக்கமான இடியால் இறந்துபட்டான் எதிரிகளில் ஒருவன். எதேச்சாரிகாரத்தின் ஏவலாட்கள் எட்டிப்பிடித்து இரும்புக் கம்பிக் கொட்டடியில் இட்டுவிட்டார்கள். ஏன் என்று எதிர் வழக்காடவில்லை யாரும் அவனுக்காக. மூன்று நாள் கழித்து விரட்டி விட்டார்கள். வரக்கூடாது இந்நாட்டிற்கு இனி என்று. இதுபோதும் என்று ஏகினான் பாரிசுக்கு, எங்கிருந்தால் என்ன என்ற எண்ணத்துடன். நேராக முதலாவது பிரான்சிசிடம் சென்றான். அவர்தான் அந்தச் சமயம் அந்நாட்டின் அதிபதியாய் அக்ராசனம் அமர்ந்திருந்தார். அடைக்கலம் புகுந்தான் அவரிடம். தான் செய்த தவற்றைத் தள்ளிவிட வேண்டினான். அவருக்கே அர்பணமாக அளித்தான் அதுவரை ஆராய்ந்து எழுதி முடித்திருந்த லத்தீன் மொழி பற்றிய இரண்டு பாக நூற்களை.

அந்த எழுத்துப் பிரதிகளை அச்சிட்டுக் கொடுக்க ஆள் அகப்படுமா? என்று அலைந்தான். அதே ஆவலுடன் ரியான்ஸ் நகரைச் சேர்ந்தான். ஏன்? அந்த இடந்தான் அன்று சிற்புற்றிருந்தது. புத்தக வெளியீட்டிலும், விற்பனையுலும் முதலிடத்தைப் பெற்றிருந்தது. அந்த இடத்தை அடைந்தவுடன் கிளெமண்ட்மாரெட் என்பார் தோழனாகத் தோன்றினார் டோலட்டுக்கு. கிளெமண்ட் மாரெட் அன்று பிரான்ஸ் நாட்டின் பெரிய கருவியாக இருந்தார் என்றால், எப்படி ஏற்பட்டது இருவருக்கும் தோழமை என எண்ணவேண்டுமா? அதோடு அல்லாது அவரும் அரசாங்கத்தின் அரிய விரோதிதான். ஏன் மதவிரோதமான குற்றம் செய்ததற்காக இத்தாலி நாட்டில் இருந்து வந்தார். ஆனால் எத்தனை நாட்களுக்கு இன்னொருவர் நாட்டில் இருந்து வாழ முடியும்! அதுவும் நாட்டுமக்களின் நன்மையில் ஆர்வங்கொண்டவர்களுக்கு எப்படி முடியும்! ஆழ்ந்து யோசித்தார். பிரான்ஸிஸ் மன்னனிடம் பிழை பொறுத்துக் காப்பாற்ற வேண்டுவோம் என்ற கருத்தைக் கொண்டார். கடுகி வந்தார் காணாதிருந்த தாய்நாட்டிற்கு, இருவரும் சேர்ந்து எழுதினார்கள் பிரான்ஸிஸ் பெருமானுக்குப் புத்தகங்கள் வெளியிட அனுமதி கோரி. மன்னனும் மாரெட்டை முந்திய குற்றங்களுக்கு வகை செய்யக் கேட்டான். டோலட்டுக்கு மட்டும் பத்து வருடங்களுக்குப் புத்தகங்கள் வெளியிட லைசென்ஸ் கொடுத்தான். அதுவும் இத்தாலி, கிரீக், லத்தீன், பிரான்ஸ் இந்த நான்கு மொழிகளிலும் வெளியிடலாம் வேண்டிய புத்தகங்கள் என்று. 'ஆனால்' என்ற அசட்டு மொழி அரசாங்க உத்தரவுகளில் இல்லாதிருபபது இன்று கூட மிக அருமை. ஆகவே, டோலட்டின் உத்தரவில் 'ஆனால்' அச்சிடுவதற்கு முன்னால் அவன் தன்னுடைய எழுத்துப் பிரதிகளைப் பாரிஸ் என்ற இடங்களில் இருந்த இன்னின்னாருக்குக் காட்ட வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது.

மன்னரின் மனதறிந்த மாரெட் தனது மதவிரோத செயல்களுக்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். டோலட் தோற்றுவித்தார் ஒரு அச்சிடும் அரங்கத்தை. அது ஆரம்பித்த சிறுகாலத்திற்குள் சிறந்த செல்வாக்கை அடைந்தது. ஆனால் தன்னலமற்ற தக்கோரிடம் தங்கி இருப்பதில்லை தரணியில் எந்த இலாபந்தரும ஸ்தாபனமும். அதுவும் இரண்டுபேரிடம் எப்படி நிலைத்திருக்கும் நீண்டநாட்களுக்கு. இந்த இருவரம் வேகமான இரத்தத் துடிப்பைப் பெற்றவர்கள். எதையும் எண்ணி எண்ணிப் பார்த்து இருந்து இருந்து யோசித்து, இதைச் செய்தால் இன்னது வருமே என்பதையும் எண்ணாது எடுத்ததை முடிக்கும் காரியவாதிகள். பயம் என்ற பதத்தையே பரிகசிப்பவர்கள். இரும்பைவிட இறுகிய நெஞ்சுரங்கொண்டவர்கள். இத்தகையவர்கள் எண்ணியதையெல்லாம் எழுதப் பேனா பிடித்தால் சுதந்திரம் முன்பே கிடைத்திருக்கும்.

டோலட் எழுதிய லத்தீன் மொழி பற்றிய நூல் பல பதிப்புகளாகப் பறந்தன. பரந்த உலக மக்களிடையே 'புதிய சங்கல்பம்' என்ற பெரும் நூல்கள் பத்தாயிரக் கணக்கில் பதிப்பிக்கப்பட்டன. பணம் கொடுத்து வாங்கி மக்கள் படித்தார்கள். இந்த வெற்றி எதிரிகளின் கண்ககளைக் கருக்கியது. எதிரிகள் யார் தெரியுமோ? அவர்கள்தான் மதவாதிகள். இந்த மதவாதிகள்தான் மக்கள் சமூகத்தின் மாசற்ற விரோதிகள் என்பதற்கு எத்தனையோ சான்றுகளில் இதுவும் ஒன்று. 1542ஆம் ஆண்டு அடைந்தார்கள் கொட்டடியில் மதவிரோதமான புத்தகங்களை டொலட் வெளியிட்டார் என்பதற்காக. நலிவுற்றான் சிறையிலும் வெளியிலுமாக. உயிருடன் இருந்தால் ஆபத்து என்று எண்ணிற்று இறுமாப்புக் கொண்ட மதகுருக்கூட்டம். இறுதியாக டொலட்டின் உடலை இருகூறாக்கக் கட்டளையிட்டது. எழுதி வெளியிட்ட எல்லாப் புத்தகங்களையும் எரித்து சாம்பலாக்கவும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அன்று அந்நாடுகளில் அரசனைவிட அதிக அதிகாரம் வகித்திருந்தது அந்த மதமனம் கொண்ட மக்கள் கூட்டம் என்பதை மலையுச்சியிலிருந்து காட்டுகிறது உலக சரித்திரம். ஆகவே, டோலட்டின் இந்தத் துணையற்ற துயரம் தந்த வழக்குத் தெரியவே தெரியாது பிரான்சிஸ் மன்னனுக்கு. கடவுளைக் காட்டிக் காசைப் பிடுங்கி, மக்களைக் காட்டு மிராண்டிகளாகக் கண்காணித்து வந்த அந்தக் கல் மனக்கயவர் கூட்டம், நமது டோலட்டின் உயிர் பறிக்கப்பட்டால் உண்டாவார்கள் ஆயிரக்கணக்கில் உண்மை வீரர்கள் என்பதை உணர முடியுமா ஒய்யார மதவாதிகளுக்கு! மத விரோத குற்றத்திற்காக மடியும் டோலட்டுக்கு மக்கள் சிலை கட்டி, மனத்தால், வாயால் வாழ்த்துவார்கள் பின்பவரும் காலத்தில், என்பதை எப்படி அறிய முடியும் அந்த கூட்டத்தால்! இன்று அவ்வீரன் பலியிடப்பட்ட அந்த இடத்திலேயே எழுந்து நிற்கிறது டோலட்டின் உருவச் சிலை. ஒவ்வொரு ஆண்டும் ஒன்றுகூடிப் போற்றுகிறார்கள் அந்த உன்னத உயிர்த் தியாகியை. ஆம்! அந்நாட்டின் அறிவுக்கு அடிப்படையான பேச்சு, எழுத்து உரிமைகளுக்கு விரைபோட்ட வீரனைக் கொண்டாடாமல் என்ன செய்வார்கள் விடுதலை ஆரவங்கொண்ட மக்கள்!

அழியாப் புகழ் பெற்ற டோலட் உயிர்விடும் சமயம், கடைசியாகத் தனது நாட்டிற்கு விடுத்த மனம் உருகும் மெய் மொழிகள் இரண்டு. அவை,

"எனக்காக நான் ஏதும் வருந்தவில்லை. ஆனால் விஷயங்களை விளக்கமாக அறிய அறிவு பெறாது அறியாமையில் ஆழ்ந்து கிடக்கு்ம் எனது இன்ப மக்களுக்காகவே என் நெஞ்சம் துடிக்கிறது"

(திராவிடநாடு - 19.06.1949)

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by Anna Peravai, Chennai, Tamil Nadu.