தம்பிக்கு அண்ணாவின் இறுதிக் கடிதம்


தமிழர் திருநாள்
14.01.1969

தம்பி,

எந்தப் பணி எனக்கு இனிப்பும் எழுச்சியும் தந்து வந்ததோ,

எந்தப் பணியிலே நான் ஆண்டு பலவாக மிக்க மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு வந்திருந்தேனோ,

எந்தப் பணியின் மூலம் என்னை உன் அண்ணனாக நீ உள்ளன்புடன் ஏற்றுக்கொண்டு பெருமிதத்துடன் உலகுக்கு அறிவித்து வந்தனையோ,

எந்தப் பணி வாயிலாக என் கருத்துககளை உனக்கு அணித்து உன் ஒப்புதலைப் பெற்று அந்தக் கருத்துககளின் வெற்றிக்கான வழியினைக் காண முடிந்ததோ,

எந்தப் பணியின் மூலம் தமிழகத்தை அறியவும், உலகத்தை உணரவும், தமிழ்ப் பண்பை நுகரவும், வழி கிடைத்து வந்ததோ, எந்தப் பணிமூலம் என்னை எப்போதும் உன் இதயத்தில் எனக்கு ஓர் இடம் கிடைத்து அதுகுறித்து நான் அளவற்ற அகமகிழ்ச்சி பெற முடிந்ததோ,

அந்தப் பணியினை முன்புபோலச் செய்ய முடியாதவனாக்கப்பட்டு, முடியவில்லையே என்ற ஏக்கத்தால் தாக்கப்பட்டு, சூழ்நிலையின் கைதியாக்கப்பட்டுக் கிடக்கிறேன் என்பதை அறிவாய்.

சூழ்னிலையின் கைதி என்ற சொற்றொடருக்குத்தான், முதலமைச்சர் என்று முத்திரையிட்டிருக்கிறார்கள்.

தம்பி தம்பி தம்பி என்று கிழமை தவறாமல் பலப்பல ஆண்டுகள் உன்னை அழைத்து உரையாடி அளவளாவி வந்திருக்கிறேன். இரண்டு ஆண்டுகளாக அந்த விருந்தினை இழந்து தவிக்கிறேன்.

முதலமைச்சர் என்ற முறையில் பல பிரச்சினைகள் பற்றிய கருத்துக்களை அறிக்கைகள், சொற்பொழிவுகள், சட்டமன்ற உரைகள் மூலம் நாட்டுக்குத் தந்துவிட முடிகிறது. தனிமையாக உன்னிடம் உரையாடி மகிழ்ந்திட என்று நான் வகுத்துக்கொண்ட கிழமைக் கடிதம் எழுதிட இயலவில்லை.

பிரச்சினைகளை விலக்கிட, ஐயப்பாடுகளைப் போக்கிட, அச்சம் துடைத்திட, மறுப்புக்கு மறுப்புரைக்க, வாழ்க வசவாளர்கள் என்று அவர்களை வாழ்ததிட, தம்பிக்குக் கடிதம் மிக நேர்த்தியான முறையில் பயன்பட்டு வந்தது.

எனக்குத் தோன்றும் எண்ணங்களை உன்னிடம் கூறி விடுவதிலே தனியானதோர் மகிழ்ச்சி.

எனக்கு ஏற்படும் மகிழ்ச்சியினை உன்னோடு பங்கிட்டுக கொள்வதிலே ஓர் இன்பம்.

கவலை குடையும்போது, மன உளைச்சல் ஏற்படும்போது, உன்னோடு உரையாடி, தம்பி உடையான் படைககு அஞ்சான் என்ற எழுச்சி பெற்று வந்தேன்.

இப்போது? அந்த இன்ப நாட்களை எண்ணி எண்ணி ஏக்கம் கொள்கிறேன். சுமக்கும் பளுவினாலே கூனிக்குறுகி வாடுகிறேன். எத்தனை எத்தனையோ பிரச்சினைகளை பற்றிய கருத்துக்களைக் கூற நேரமோ வாய்ப்போ இன்றித் தவித்திடுகிறேன்.

ஆயினும், முன்பு செலவிட்டதைக் காட்டிலும் அதிக நேரம், வேலைக்காக ஒதுக்குகிறேன். இலக்கியச் சுவை நுகர்ந்திட நேரமில்லை. கலையழகினை எண்ணிட நேரமில்லை வேலை வேலை வேலை ஓயாத வேலை உடலும் உள்ளமும் அலுத்துப் போகும் அளவு. கடமையை நிறைவேற்றிக் கொண்டிருக்கவே காலம் போதவில்லை. களிப்புப் பெற்றிட உன்னிடம் உரையாடிட நேரத்தைக் கண்டறிவதே மிகச் சங்கடமாகிவிட்டது.

இந்தக் கிழமை எப்படியும் தம்பிக்கு கடிதம் எழுதிடவேண்டும் என்று தீர்மானித்து எழுதத் தொடங்குவேன். தொலைபேசி மணி ஒலிக்கும் . . .

சீப் பா . . .

ஆமாம். நான்தான் . . .

எங்க ஊர் வாக்கால் விஷயமாக மனு அனுப்பினது பற்றி . .

பரிசீலனையில் இருக்கிறது.

அண்ணா நீங்க பார்த்து முடிவு செய்யவேண்டியதுதானே, இதற்கு என்ன பரிசீலனை தேவை?
அப்படி அல்லவே, இலாக்கா பரிசீலனை செய்தாக வேண்டுமே.

அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. எப்படியும் முடித்துக் கொடுத்தாக வேண்டும்.

சரி, சென்னைக்கு வரும்போது விளக்காமாகக் கூறுகிறேன்.

உடம்பைப் பாத்துக்கொள்ளுங்கள் அண்ணா.

ஆகட்டும் ஆகட்டும்

வேலைகளைக் குறைத்துக் கொள்ளுங்கள், இளைப்பும் களைப்பும் அதிகமாகத் தெரிந்தது போன மாதம் பார்த்தபோது.

தம்பி என் மனதுக்கு இனிமை தந்திடும் பணியிலே என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லையே என்ற கவலை ஒருபுறம், அத்துடன் பின்னிப் பிணைந்துகொண்டு என் உடல் நிலையைப் பற்றிய கவலை ஒரு புறம்.

என் பேரப்பெண், இளங்கோவனின் மகள் கண்மணி தன் மழலை மொழியில் பாடுகிறாள்.

'நலந்தானா? நலந்தானா?
உடலும் உள்ளமும் நலந்தானா?'

என்று. எனக்கென்னமோ அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம் என் தம்பிகள் தங்கைகள் நாட்டின் நல்லோர் அனைவருமே என்னை நலந்தானா? என்று கேட்பதுபோலவே தோன்றுகிறது. கடந்த ஓராண்டாகவே இந்தக் கேள்வி கிளம்பியபடி இருந்தது. அமெரிக்கா சென்று அறுவை சிகிக்கை செய்து கொள்ளவேண்டிய அளவுக்கு உடல் நலம் பாழ்பட்டது.

ஆனால் அதற்கு ஏற்பட்ட கவலையை நான் உதறித் தள்ளும் விதமான அன்பும் கனிவும் நாடு முழுவதிலுமிருந்து கிடைத்தது. அரசியலில் நம்மோடு மாறுபட்டிருப்பவர்களிலே பலரும் கனிவு காட்டிடக் கண்டேன். மனிதத் தன்மை அடியோடு மடிந்துவிடவில்லை என்பதனை உணர்ந்தேன்.

தம்பி! அந்த மனிதத் தன்மையிலேதான் முழுக்க முழுக்க நம்பிக்கை கொண்டிருக்கிறேன். மனிதத் தன்மை திகழ்ந்திடச் செய்வதைக் காட்டிலும் மகத்தான வேறோர் வெற்றி இல்லை என்றே கருதுகிறேன். அரசுகள் அமைவதே இந்த மனிதத்தன்மையின் மேம்பாட்டினை வளர்த்திடத்தான் என்று கருதுகிறேன். அரசுகள் அமைவதே இந்த மனிதத்தன்மையின் மேம்பாட்டினை வளர்த்திடத்தான் என்று கருதுகிறேன். என்னால் எந்தப் பிரச்சினையையும் மனிதத்தன்மை கலந்ததாக மட்டுமே கொள்ள முடிகிறது.

அதனால் கொடுமை நேரிட்டுவிடும்போது குமுறிப் போகிறேன். அக்கிரமம் நடைபெற்றிடும்போது நெஞ்சில் வேல் பாய்கிறது. இந்நிலை உடலைப் பாதிக்கிறது. மருத்துவர்கள் பலர் என் உடல்நிலை தேறிடத் துணை நிற்கின்றனர். ஆனால் உன் புன்னகை தவழும் முகத்தை மனக்கண்ணால் காணும்போதுதான் உண்மையான மாமருந்து கிடைக்கிறது. கிடைத்தற்குரிய அந்தச் செல்வத்தைக் கொண்டு மகிழ்ச்சிப் பெருககிறே திளைத்திருக்க எண்ணும் என்னை, தம்பீ! நான் மேற்கொண்டுவிட்ட கடமை வேலையைக் கவனி! வேலையைக் கவனி! என்று முடுக்குகிறது.

இன்று எப்படியாவது எழுதுவது – ஆண்டுக்கோர் நாள் அருமைமிகுந்த நாள் – பொங்கல் புதுநாள் – அதற்காக வெளிவரும் மலரில் எப்படியும் எழுதவேண்டும் என்று எண்ணிக்கொண்டு ஏடெடுத்தேன், எழுத! எடுத்து?

நிதிக்குழுவினருடன் பேசவேண்டிய பிரச்சினைகளைப் பற்றிய தகவல்களுடன் நிதித்துறைச் செயலாளர், அமைச்சர் மாதவனுடன் வந்தார். ஒரு மணிக்குமேல் உருண்டோடி விட்டது. சிக்கலான பிரச்சினைகள் – பேசித்தீர்த்தாகவேண்டிய பிரச்சினைகள் – நமது மாநிலத்து வருவாய்த் துறையை் எந்தெந்த முறையிலே செப்பனிட முடியும் என்பது பற்றி ஆய்ந்தறியவேண்டிய கட்டங்கள்.

உன்னை மறந்தேன் என்ற பொருள் கொள்வாயோ! விவரமறிந்த தம்பியாயிற்றே! ! உனக்காகவும் சேர்த்து மேற்கொள்ளப்படுகிற வேலை என்பதனை அறிவாயே. பிரச்சினைகளைப் பேசினோம், புள்ளி விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டோம், தொடர்பான நிகழ்ச்சிகள் பற்றிய முறைகளை வகுத்துக் கொண்டோம்.

அதற்குப் பிறகுதான் எழுத ஆரம்பித்தாயா அண்ணா! என்றுதானே கேட்கிறாய்.

அதற்குப் பிறகும் அல்ல தம்பி! அதைப்போல மூன்று நான்கு தவிர்க்க முடியாத வேலைகளைக் கவனித்த பிறகு எழுத அவண்டும என்று முடிவு எடுத்ததற்குப் எழுதத் தொடங்கியதற்கும் இடையில் ஆறு ஏழு மணிகள் சென்று விட்டன. இந்நிலையில் நான் இருந்திடினும் பொங்கல் புதுநான்ள வாழ்த்தினைத் தெரிவித்துப் பெற்றிடும் மகிழ்ச்சியினை மட்டுமூ நான் இழந்துவிடமாட்டேன்.

நமக்கென்று உள்ள ஒப்பற்ற விழா அல்லவா அது. எத்தனையோ இன்னல்கள் தாக்கிடினும் அவைகளை மறந்து, ஒருநாள் மனைதொறும் மகிழ்ச்சியுடன் கொண்டாடிட என்று அமைந்த நாளல்லவா பொங்கல் புது நாள். பேச்சிலே ஓர் இசை கலந்திடும் நாள், இத்திருநாள்! இந்நாளிலே உனக்கு வாழ்த்துக் கூறுவதிலே பெற்றிடும இன்பம் ஈடற்றதல்லவா? எனவேதான் எப்படியும் எழுதுவது என்று உட்கார்ந்தேன்.

உலக நாடுகள் பலவற்றின் தலைநகரங்களை ஒரு முறைக்கு மும்முறை கண்டுவந்தேன். அங்கு எங்கும் விழக்கள் பலப்பல நடத்தப்படினும் – தமிழத்தி்ன் பொங்கல் புது நாள் கோன்றதோர் பொன்விழா இல்லை – நிச்சயமாக இல்லை. கோலாகல விழாக்கள் உள்ளன, பரபரப்பூட்டும் விழாக்கள் நடத்தப்படுகின்றன, கேளிக்கைகள் மதுபான விருந்துகள் மிகுதியாக, எனினும் ஆர்ப்பரிப்பின்றி – ஆனால், அகமகிழ்ச்சியுடன், போலிப் பூச்சுகளின்றி – ஆனால், புதியதோர் பொலிவுடன் வீட்டில் உள்ள அனைவரும் கலந்துரையாடி மகிழ்ந்திருக்கும் நமது பொங்கல் புதுநாளுக்கு ஒப்பான விழா அங்கு எங்கும் இல்லை.

நாட்டியக் கூடங்களிலே அமளி! பாதைகளிலே புது வேகம்! மோதல், உயிர்ச் சேதம்! அங்காடிகளிலே ஆரவாரம்! இவைகள் ஏராளமான அளவு! ஆனால், இங்கு வீடுதோறும் எழுகிறதே – முதியவரும் மூதாட்டியரும் – இளைஞரும் ஔ நங்கையரும் – சிறாரும் சிறுமியரும் – கலந்து எழுப்பும் பொங்கலோ பொங்கல்! என்ற இசை, அது அங்கு எங்கும் இல்லை. இருந்திடத் தக்கவிதமான சமூக அமைப்பே இல்லை.

தம்பி! வறுமை வாட்டுகிறது. இல்லை என்று கூறவில்லை. எண்ணிடும் திட்டங்களை நிறைவேற்றிட வசதிகள் கிட்டவில்லை, அதனை மநைத்துப் பயனில்லை. வளம் கொழித்திட வழி தேடியபடிதான் இருந்து வருகிறோம். இன்னும் பொழுது புலரவில்லை. இவ்வளவும் உண்மை, ஆனால், தமிழகத்தில் பன்னெடுங் காலத்துக்கு முன்பிருந்து நாடுபல தனது எல்லையை வகுத்துக்கொண்டு அரசு அமைத்துக் கொண்டு நிலவத் தொடங்குவதற்கு நெடுங்காலத்திற்கு முன்பே நாம் பெற்றிருந்த கருத்துச் செல்வத்தை எண்ணிப் பார்க்கும்போது நமக்கு இன்றுள்ள எல்லாத் துயரங்களையும் ஒரு கணம் மறந்து வேறு எவரும் பெற முடியாத ஒரு பெருமித உணர்வினை நாம் பெற முடிகிறது.

அத்தகைய கருவூலத்தை நமக்குத் தந்த தமிழ் நாட்டுககு நாம் ஒது நாள் வரையில் அரசியல் சட்ட திட்டத்தில் தமிழ்நாடு என்ற பெயரைக் கூடப் புகுத்தத் தவறினோமே மறுத்து வந்தோமே எதிர்த்து வந்தோமே என்று காங்கிரஸ் கட்சியினர் எண்ணி வருத்தப்படுகிறார்கோ இல்லையோ நானறியேன். நாம் இவர்காளல் என்ன ஆகும்? என்ற ஏளனக் கணைகளால் தாக்கப்பட்ட நாம் – நாம் ஆட்சிப் பொறுப்பினைப் பெற்றதன் விளைவாக இந்தப் பொங்கல் புதுநாளிலிருந்து, நாம்ன உலகுக்கு அறிவிக்க முடிகிறது. இது தமிழ்நாடு என்பதாக. பெயரில் என்ன இருக்கிறது என்று பேசிய நம் பெரியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் பாடினாரே பாரதியார்,

செந்தமிழ் நாடெனும் போதினிலே
இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே

என்று அந்தக் கவிதா வாக்கியம் பெரிய இடத்தில் அமர்ந்து கொண்டு சின்னத்தனம் பேசிடும் பலருடைய ஏளனத்தைப் பொருட்படுத்தவேண்டாம், உயர்ந்த எண்ணம் கொள், என்றன்றோ கட்டளையிடுகிறது. நாம் தமிழ்நாடு என்ற பெயர் பெற்றிடக் காரணமாக இருந்தோம் என்ற தித்திப்புக் கலந்திடும் பொங்கல் புதுநாள் இந்த ஆண்டு.

போதும் என்று நான் கூறவில்லை, அத்துணைப் பேதமை என்னை பிடித்தாட்டவில்லை.

தமிழகத்துக்கு வளமளிக்க வேண்டிய பருவ மறை தவறிவிட்டது. ஏரி, குளம், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. வயல்கள் வெடித்துக் கிடக்கின்றன பல மாவட்டங்களில். எண்ணிடும்போதே கவலையும் கலக்கமும் மிகத்தான் செய்கிறது. எனினும், இந்த நிலையை மனதிலே எண்ணி இதம் தரும பல செயல்களை அந்த இடங்களிலே மேற்கொண்டும்படி திட்டமளிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு என்ற பெயர் கிடைப்பதால் கிடைத்திடும் பெருமிதம் காலமெல்லாம் நிலைத்து நிற்கும், நமது வழி வழி வருவோருக்கெல்லாம் நம்மைப்பற்றி அறிவிக்கும், வரலாற்றில் இடம்பெறும். பருவ மறை தவறுவதும் வறட்சி மிகுவதும் பஞ்சநிலை தலைதூக்குவதும் என்றென்றும் இருப்பதல்ல, திங்கல் சில.

எனவேதான், தம்பி! எப்போதுமே எழுச்சியுடன் நடாத்திடும் பொங்கல் புதுநாளை இவ்வாண்டு புதியதோர் எழுச்சியுடன் கொண்டாடிடக் காரணம் இருக்கிறது என்பதனை நினைவு படுத்துகிறேன்.

உடையார்க்கே – விழாவெல்லாம், ஏழையார்க்கு ஏது? என்ற கேள்வியிலே தொக்கியுள்ள நியாயத்தை நான் மறுப்பவனல்லான். தமிழகம் முழுவதும விழாக்கோலம் கொள்ளக்கூடிய விதமான வளம் கொழித்திட வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கான வழியாவை என்பது பற்றி ஆய்வாளர்களிடம் அறிவுரை கேட்டுப் பெறுகிறேன். திட்டம் பல தீட்டப்படுகின்றன. ஆனால், அவைகள் நிறைவேற்றத் தேவைப்படும் பணம் இந்தியப் பேரரசிடமல்லவா முறையிடவேண்டயிருக்கிறது? முறையிடுகிறேன் – கனிவும் பணிவும், குறையாமல் – வம்பு வல்லடிப்போக்கு துளியுமின்றி – ஆனால், கிடைக்கிறதா? நிரம்ப! காரணங்கள், நியாயங்கள்! வாதங்கள்! எதற்கு? இவ்வளவுக்கு மேல் பணம் தருவதற்கு இல்லை என்பதற்கு! என் செய்வேன்? அண்ணன் ஏன் எப்போதும் கவலைப்பட்டபடி இருக்கிறார் என்று சில தம்பிகள் கேட்கவே செய்கிறார்கள். நான் கவலைப்படாமல் எப்படி இருக்க முடியும்?

ஆகவேதான் மாநிலங்கள் அதிக அளவில் அதிக அதிகாரங்களைப் பெறத்தக்க விதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைப்பப்படவேண்டும் என்பது பற்றி வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் எடுததுக்கூறி வருகிறேன்.

இதற்கான நல்லாதரவு நாளுக்குநாள் வளர்ந்தபடி இருக்கிறது என்பதிலே எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி. நமது கழகம் மட்டுமின்றி, வேறு பல அரசியல் கட்சிகளும் இப்போது இதனை வலியுறுத்த முன் வந்துள்ளன. அரசியல் கட்சிகளைச் சேராத அறிவாளர் பலரும் அதற்கு ஆதரவு காட்டுகின்றனர். நாம் அரசு நடாத்தியதால் கிடைத்து இருக்கின்ற நற்பலன்களிலே இதனை ஒன்று என்றே நான் கருதுகிறேன்.

தமிழகத்தின் தனித்தன்மைகள் சிறப்புகள் குறித்துப் பேசுவதனையே இந்திய ஒருமைப்பாட்டுக்குக் கேடு பயப்பதாகும் என்று பேசுவார் உளர் இங்குக்கூட! அங்கு உள்ளவர்கள் அகமகிழ்வார்கள் எனற நினைப்பினர்.

தமிழகத்திற்கென்று இருககின்றனவே – தனிச் சிறப்புகள் – என் செய்வது! எப்படி மறப்பது! எப்படி மறைப்பது! !

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'
'மெய்ப்பொருள் காண்பது அறிவு'
'யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையயகம்'
'கற்றது மைம் மண்ணளவு கல்லாதது உலகளவு'

இவைகளை எங்ஙனம் மறந்திட இயலும். வேறு எங்கும் இந்த எண்ணம் ஏற்படாத நாட்களில், இவை தமிழகத்திலே மலர்ந்தன என்ற உண்மையை எப்படி மறைக்க முடியும்! ஏன் மறைக்க வேண்டும்?

சிலர் எதிர்க்க கூச்சலைக் கிளப்பியபடி இருப்பினும் இன்றைய தமிழர் தமிழகத்தின் தனிச் சிறப்பினைப் பெருமளவிற்கு உணர்ந்து எழுச்சிபெற்று வருகின்றனர். தமிழகவரலாற்றுத் துறையிலும், இலக்கியத் துறையிலும், பண்பாட்டுத துறையிலும மேலும் மேலும் ஆராய்ச்சிகள் மேற்பொள்ளப்படின் தமிழரின் தனிச்சிறப்புகள் முழு அளவு கிடைக்கப்பெறும் என்பது மட்டும, அதனைத் தரணி அறிந்து போற்றிடத் தக்க வாய்ப்பு மிகுந்திடும்.

இப்போதே அமெரிக்க ஐரோப்பிய பல்கலைக் கழகங்கள் பல தமிழ்த் துறைக்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழரின் தனிச் சிறப்புகளை ஆய்ந்தறியும் ஏற்பாடு, இங்கு இன்னமும் போதுமான அளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை. உலகமே ஏற்றுக் கொண்ட உயர் நூலாம் திருக்குறளுக்கான ஆராய்ச்ியே கூட அல்லவா இங்கு மேற்கொள்ளப்படாமலிருந்து வந்தது.

இதுகள் என்ற ஏளனத்தைச் சுமந்துகொண்டிருக்கும் நாம் ஆட்சி நடத்தத் தொட்கியதன் தொடர்பாக நடைபெற்ற உலகத் தமிழர் மாநாட்டிலே திரட்டிய பணத்தில் ஒன்பது இலட்சம் வெண்பொற்காசுகளைக் கொடுத்தல்லவா மூன்று பல்கலைக் கழகங்களையும் திருக்குறள் ஆராச்சிியில் ஈடுபடும்படி ஊக்குவித்திருக்கிறோம்.

வேறெல்லா விழாக்களும் போகும் இடத்திற்காக பொங்கல் புது நாள் இருக்கும் இடத்திற்காக என்பதனைத் தம்பி!ஆண்டு பலவாக நீ எடுததுக் கூறி வந்திருக்கிறாய்.

துவக்கத்திலே இது கேட்டு வெகுண்டெழுந்தோரெல்லாம் கூட, இப்போது உண்மைதானே! என்று கூறி முன் வந்துளளனர். பொங்கல் புது நாளை ஒட்டி, தம்பி! உன்னால் இயன்ற அளவுக்கு, தமிழரின் தனிச் சிறப்புகளைக் குறித்து எடுத்துரைக்கும் பணியிலே ஈடுபடக் கேட்டுக் கொள்கிறேன். நீ முயன்றால் முடியாததும் இருக்கிறதா? என்னையே முதலமைச்சர் ஆக்கிவிட முடிந்திருக்கிறதே உன்னால் – எதுதான் செய்திட உன்னால் முடியாது? முயன்றிடு! முனைந்திடு!

போலிப் பெருமை தேடிக் கொள்ளவோ, நாட்டின் பிறபகுதிகளைத் தரக்குறைவாகக் கருதுவதற்காகவோ அல்ல தம்பி! தமிழகத்தின் தனிச் சிறப்புகள் பற்றி நாம் அறிந்திட வேண்டும அகமகிழ்ந்திடவேண்டும், எழுச்சி பெற்றிட வேண்டும் என்று நான் கூறுவது பிறபகுதிகளும் உலகின் பல்வேறு நாடுகளும் கேட்டு இன்புறத்தக்க – அறிந்து மேற்கொள்ளத்தக்க பண்பாடு நம்முடையது. அத்தகைய கருவூலத்தை இழந்துவிடுவது நமக்கும் நாட்டுககும் மட்டுமல்ல, உலகுக்கே நட்டம் என்பதாலேயே, தமிழத் தனிச் சிறப்பு இயல்புகளை நாம் நன்கு அறிந்திட வேண்டும் என்று கூறி வருகிறேன்.

குறுகிய மனப்பான்மை என்கின்றனர் இதனை. அவர்கள் குறைமதியாளர் என்று கூறிடத் தோன்றுகிறது. பண்பாடு அந்த உணர்ச்சியைத் தடுத்து நிறுத்துகிறது. பிளவு மனப்பான்மை என்றும் கூடக் கூறுவார் உணர்! எதனை என்று பார்த்திடும்போது சிரிப்பே வருகிறது.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்'

என்ற பண்பாட்டின எடுத்துக் கூறுவது பிளவு மனப்பான்மையாமே! யாழ், காது குடைச்சலை உண்டாக்குகிறது, தேன், குமட்டலைத் தருகிறது, தென்றல், வெப்பத்தை மூட்டுகிறது என்று கூறுவதுபோல அல்லவா இருகிக்றது, தமிழ்ப்பண்பாட்டுச் சிறப்பினை எடுத்துக் கூறுவது பிளவு மனப்பான்மையை மூட்டிவிடும் என்று கூறுவது? கூறுகின்றனர், உரத்த குரலிலே கூட! உயர்ந்த இடத்திலேயே இடம் பெற்றுவிட்டதனால்! ஆயின் என்ன? மிகப் பெரிய இடத்திலே உள்ளவர்கள் கூறுகின்றனரே, அவர் தம் கருத்துக்கு மாறாக நாம் நடந்து கொள்ளப் போமா என்ற எண்ணம் எழும்போது தம்பி!

'நெற்றிக்கண்ணைக் காட்டிடினும்
குற்றம் குற்றமே!'

என்பது செவியினில் வீழ்கிறது

உண்மையை உரைத்தாக வேண்டும என்ற உறுதி பிறக்கிறது.

வான்கோழி கண்டால் வருத்தப்படுமே என்று எண்ணித் தோகையைக் கீழே உதறிப்போட்டுவிடுமா கலாபமயில்? காக்கைக்கு வருத்தமாக இருக்குமே என்பதற்காகப் பச்சைக்கிளி கறுப்புப் பூச்சைத் தேடிக்கொண்டிருக்குமா? பிறநாடுகளும் நமது நாட்டின் பிறபகுதிகளும் பெற்றிராத கருத்துக் கருவூலத்தைத் தமிழகம் பெற்றிருக்கிறது என்பதனை எடுத்துக் காட்டுவது எந்த வகையிலும் தவறு அன்று, எத்தகைய தீமையும் தந்திடாது எவருக்கும்.

தமிழரின் தனிச் சிறப்பினை அறிந்திடப் பயன்படும் நமது இலக்கியச் செல்வத்தை நினைவிற் கொள்ளவும் மற்றையோர்க்கு எடுத்துக் கூறவும் பொங்கல் புதுநாள் ஏற்றது என்பதாலேயே பெரியோர்கள் இதனைத் தமிழர் திருநாள் என்றழைக்கின்றனர்.

பழம் பெருமை பேசிப் பெருமூச்செறிந்து கொண்டே செயலற்று இருப்பதல்ல நமது குறிக்கோள். செயலினால் பெற்றிடும செழுமையை எடுத்துக்காட்டிடும் நன்னாளாம் பொங்கல் புது நாளில் செயலார்வம் மிகுத்திடுவது இயல்பு. செயலும் செம்மையானதான அமைந்திட வேண்டும. பயனும், சமூகம் முழுவதற்கும் கிடைத்திடத் தக்க முறை கண்டாகவேண்டும. வெள்ளம் அழித்திடும், - வாய்க்கால் வளமூட்டும், செல்வம் சிலரிடம் சென்று குவிந்திடுவது வெள்ளத்துக்கு ஒப்பானது, அது கொண்டவனையும் அழித்திடும், சமூகத்தில் வலிவற்றோரையும் அழித்திடும்.

எனவேதான் – சிந்தனையாளர், செல்வம் பெருக்கிட வேண்டும் அஃது முடக்கப்படாமல் சமூகம் முழுவதற்கும் பயன் அளிக்கக்கூடிய வழிமுறை கண்டாகவேண்டும் என்று எடுத்துக் கூறினர். நமது அரசு கூட அந்தச் சமதர்ம இலட்சியத்தைப் போற்றுகிறது. நமது கழகம் சமதர்ம நெறியிலே நம்பிக்கையும் நாட்டமும் கொண்டிருக்கிறது. ஆனால், நடைமுறைக்குள் புகும்போது தம்பி! ஆயிரம் ஆயிரம் தடைகள் எதிர்ப்புகள், ஆபத்து கூட!

ஆண்டவனே! ஏனோ எனக்கு இந்தச் சோதனை இத்துணை வேதனை என்ற ஏழை இறைஞ்சுகின்றான்! செல்வன், ஆண்டவன் அருளால் நான் பெருநிதி பெற்றேன், இதனைக் குறை கூறுவது தர்மமா? என்று நியாயம் கேட்கிறான்.

மொரேவியா நாட்டில் பணம் பெட்டியில் தூங்குகிறது பணக்காரன் பட்டுமெத்தையில் தூங்குகிறான். ஆண்டவன் சொல்க்கத்தில் தூங்குகிறார்! இல்லாவிடில் ஏன் இத்தனைப் பிச்சைக்காரர்கள்? என்றோர் பழமொழி உண்டு.

இந்த நிலை கண்டு வெதும்பிய நிலையில் பொங்கலாம் பொங்கல்! யாருக்னு? ஏழைக்கு ஏது அந்த இன்பம்? – என்று நம்முடைய இளங் கவிஞர்கள் கேட்கின்றனர். அந்தக் கேள்வியிலே உருக்கமும் இருக்கிறது உண்மையும் இருக்கிறது.

இந்த நிலையைக் கண்டு மனம் வெதும்பிக் கவிஞர் இராசேந்திரன் –

தைத்திங்கள் வருகின்ற பொங்கல் நாளில்
தங்கத்தைச் சுமக்கின்ற மகளிர் ஆக்கம்
நெய்ப் பொங்கல் சுவைத்துண்டு மகிழ்ச்சி கொள்வர்
நிதிபடைத்த சீமான்கள் என்றும் எங்கள்
கைதொட்டு வாய்ப்பட்ட துண்டோ பொங்கல்
கண்மட்டும் ஓயாமல் பொங்கும்! பொங்கும்!
தெய்வங்கள் திருநாட்கள் எங்கட்கு இல்லை
தெருவோரச் சாக்கடையில் வருமா தெப்பம்?


என்று கேட்கிறார். மிகைப்படுததிக் கூறுகிறரார் என்று எவரும் கூறிவிடார்! ஏழ்மை நெளிகிறது. அதிலும் வளம் பெற்றளிக்கும் பாட்டாளிகளிடம். இது நீதியன்று, தமிழர் நெறியுமாகாது.

இந்நிலை மாறிட எல்லோருக்கும் வாழ்வில் இன்பம் கிடைத்திட நாம் ஒவ்வொருவரும் தத்தமக்குக் கிடைத்துள்ள வாய்ப்பிற்கு ஏற்ற முறையில் பணியாற்றிட வேண்டும். தமிழர் திருநாளில் தமிழர் அனைவரும் களிப்புடன் கலந்து கொள்ளத்தக்கதான சமுதாய அமைப்பு முறை காணப் பாடுபட்டாக வேண்டும். உவகை தந்திடும் இந்நாளில் இதற்கான உறுதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
இந்நிலை தமிழகத்தில் மட்டுமன்று இந்தியா எங்கணும் இருந்திடக் காண்கிறோம்.

ஆனால், தம்பி! மனம் வெதும்பி இதுபற்றிக் கூறிய கவிஞரே பிறகோர் இடத்தில்,

தைத்திருநாள் வருகைபார் தம்பி! வெல்லத்
தமிழ் உள்ளம்தனில் இன்ப வெள்ளல் சேர்க்கும்
மெய்த்திருநாள் மேன்மை பார்! அறிவை வாட்டி
மெலிய வைக்கும் தேவையற்ற பண்டிகைகள்
பொய்தினிமேல் போய்விடும்! பார் வானில் பாயும்
புலிச்சின்னப் புகழ் மன்னன் கரிகாலன்றன்
கைத்திருவாள் வெளிச்சம்போல் மின்னுகின்ற
கதிர்மணியின் குவியல் பார்! கரும்பைப்பார்!

என்று எழுச்சியுடன் பாடுகிறார். தமிழ் கற்றுணர்ந்தவர்கள் அனைவருமே இதுபோத்தான், சமூகத்தில் மூட்டி விடப்பட்டுள்ள கேடுகளைக் கண்டு மனம் வெதும்பினாலும் பொங்கல் புதுநாளை மட்டுமூ தமிழர தமது திருறாளாகக் கொள்ளவேண்டும் என்பதனை எடுத்துரைத்து வருகின்றனர். காரணம் மற்றைய பல விழாக்கள்,
கொடுதது வைத்தது அவ்வளவுதான்,

நாம் வந்த வழி அது,
இங்கு துன்பம், அங்கு இன்பம் கிட்டும்,

என்ற எண்ணங்களுக்கு முதலிடம் தருவன. தமிழர் திருநாளாம் பொங்கல் புதுநாள் தனித்தன்மை பெற்றது.

உழைப்பே செல்வம்
உழைப்பே உயர்வு
உழைப்பின்றி உலகு இல்லை.

என்பன போன்ற நற்கருத்துக்களைத் தருவதாக அமைந்திருக்கின்றது.

பணம் படைத்தவர்கள் அது எந்த வழியிலே கிடைத்தது என்றாலும் சமூகத்திலே முன்னிடம் பெற்றவிடுவது காண்கிறோம். அந்தப் பணம் எபண்மை அழிப்பதுடன், சமூகத்தில் பலமுறை கேடுகளை மூட்டிவிடுகிறது தம்பி! சல்வச் சீமானின் மகன் – இளைஞன் எப்படி நடந்து கொள்கிறான் என்பதனை நன்கு அறிவாய் அல்லவா? சீமான் மக்ள் கொண்டாடும் விழா அன்று பொங்கல் புதுநாள். சமூகத்தின் கோணல்களை நிமிர்த்தியாக வேண்டும் என்ற குறிக்கோள் கொண்ட உன் போன்றாருக்கென்றே அமைந்துள்ள விழாவாகும்.
கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் தக்க முறையிலே பயன்படுத்தினால், சமூகத்தை நிச்சயமாகத் திருத்தி அமைத்திடலாம்.

காலத்தை வீணாக்கமல் சமூகத் தொண்டாற்ற ஓர் துடிப்பு உனக்கு உண்டு என்பதனை உணர்ந்த உன் அண்ணன் இன்று உனக்கக் கனிவு நிரம்பிடும் வாழ்த்தினை அளிப்பதுடன் உன் இல்லத்துள்ளார் யாருக்கும் வாழ்த்துக் கூறுவதுடன் நாடு வளம்பெற, சமூகம் சீர்பெற, சமதர்மம் மலர்திடப் பாடுபடுவதற்கான உறுதியினை இன்று பெற்றிடுக என்றும் கூற விரும்புகிறேன்.

ஒரு நிமிடம் கூட வீணாக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நான் கூறுவதற்குக் காரணம் தம்பி எங்கோ படித்ததாக நினைவு – ஒரு நிமிடத்தில் விண்ணிலிருந்து 6000 விண் கற்கள் விழகின்றன. பூமி தன்னைத்தானே 850 மைல் வேகத்தில் சுற்றுகிறது. 100 பேர் இறந்து படுகின்றனர், 114 குழந்தைகள் பிறக்கின்றன.. 34 திருமணங்கள், 16 விவாக விடுதலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 68 மோட்டார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதாக.

காலம் அத்துணை மதிப்பு வாய்ந்தது. கடமை உணர்ந்த நீ, காலத்தையே கனியச் செய்திடும் ஆற்றல் பெற்ற நீ, தமிழக அரசியலையே மாற்றி அமைத்த நீ, உன் கடமையைச் செய்வதிலே கண்றம் கருத்துமாக இருப்பாய் என்பதனை நான் நன்கு அறிவே. எனினும், அண்ணன் என்ற உரிமையுடன் உனக்கு அந்தக் கடமையை நினைவுபடுத்துவது எனக்கோர் மகிழ்ச்சி தந்திடுவதுபோல உனக்கும் மகிழ்ச்சி தந்திடும் என்பதிலே ஐயப்பாடு இல்லை.

என்னைப் பொறுத்த மட்டிலே தம்பி! நலிவைத் தாங்கியபடி என்னால் இயன்றதைச் செய்துகொண்டு வருகிறேன்.

தாத்தாவுக்கு ஏன் கைவலி தெரியுமா....? எழுதுவதாலே! என்று என் பேரன் மலர்வண்ணன் – என் மகன் டாக்டர் பரிமளம் பெற்ற செல்வன் கூறுகிறான்!

உண்மைதான்!வலி இருக்கத்தான் செய்கிறது. ஆனால், தம்பிக்கல்லவா கடிதம் எழுதுகிறேன். அது தனியானதோர் சுவையைத் தருகிறது!

மகிழ்ந்திரு! விழா நடத்திடு! வேலை மிகுதி இருக்கிறது என்ற நினைவுடன்.


- அண்ணாதுரை

முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai