சிறப்புக் கட்டுரைகள்

ஜனநாயக சர்வாதிகாரி
பேரறிஞர் அண்ணா
( 2.06.1960)

தம்பி சட்டம் வேண்டாம் என் சொல் போதும் வழக்கு மன்றம் வேண்டாம். என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள் போதும் என்று கூறிக் கொடுமை அப்பட்டமாகத் தெரியும்படி நடந்துகொள்ளும் சர்வாதிகாரிகள் உண்டு.

சட்டம், வழக்குமன்றம், வழக்கறிஞர், நீதிபதி விசாரணை எனும் முறைகள் அப்படியே வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் தன் இச்சைப்படி ஆட்டிவைக்கும் முறையைப் புகுத்தி சர்வாதிகாரம் செய்வாரும் உண்டு.

முன்னவரைவிட இரண்டாமவர், மிக்க ஆபத்தை மூட்டுபவராவார்.

“என்ன அண்ணா! ஏதோ வழக்குக் குறித்துக் கூறப்போவதாகச் சென்ற கிழமை கூறினாய், இப்போது ஏதோ சாய்வு நாற்காலிக்காரர்போல அரசியல் முறைபற்றிய ஆய்வுரை பேசுகிறாயே” என்று கேட்கிறாயா, தம்பி! வழக்கு மன்றம் நோக்கித் தான் நடக்கிறோம். வழியில் இதைக் கூறினால், போகிற இடம் புரியும் என்பதற்காகச் சொன்னேன்.
‘இரண்டாமவர்’ என்றேனே, அப்படிப்பட்ட ‘சர்வாதிகாரி’யின் பிடியில் உள்ள நாடு! அந்த நாட்டு வழக்கு மன்றத்திலே, ஒரு வழக்கு நடைபெறுகிறது. காண்போம், வா.

வழக்கு மன்றம், இருக்கவேண்டிய முறைப்படிதான் இருக்கிறது.

பெருநெருப்பு நீதிபதியாகவும், கொடுவாள் போலீஸ் அதிகாரியாகவும், அரிவாள் வழக்கறிஞராகவும் இல்லை!

சட்ட நுணுக்கம் தெரிந்து, நீண்டகாலம் வழக்காடித் திறம் பெற்ற பழுத்த அநனுபவசாலிதான், நீதிபதி இருக்கையில், அமர்ந்திருக்கிறார்.

அவருடைய சட்ட அறிவு நாடு அறிந்ததாகும். பல சிக்கலான வழக்குகளிலே நல்ல தீர்ப்புத் தந்து, நற்பெயர் எடுத்தவர்.

மற்ற மற்றவரும் அதுபோன்றே – கற்றறிவாளர்.

நீதிபதி அமருகிறார். மற்றவர் வந்தமருகின்றனர். போலீஸ் அதிகாரி நின்று கொண்டிருக்கிறார்.

நீதி: கைதியைக் கொண்டுவா.

(போலீஸ் அதிகாரி வணக்கம் செலுத்தியபடி)
போலீ: அங்ஙனமே, பெருந்தகையே

(போலீஸ் அதிகாரி வெளியே செல்கிறார்)

(நீதிபதியின் மேசை மீதுள்ள டெலிபோன் மணி ஒலிக்கிறது. நீதிபதி டெலிபோனை எடுத்துப் பேசுகிறார். பேசுபவர் யார் என்று தெரிந்ததும் முகமே மாறிவிடுகிறது, பரபரப்பு அடைகிறார், எழுத்து நிற்கிறார். மரியாதையுடன். அவர் எழுந்து நிற்பதைக் கண்டு மற்றவர்கள் எழுந்து நிற்கிறார்கள்.)

தம்பி! நிலைமை புரிகிறதா! அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல், சட்டத்தின் துணையையும் தன் அறிவையும் கொண்டு, வழக்கினை விசாரித்து நீதிகண்டு. தீர்பளிக்கவேண்டிய நிலை பெற்றவர் நீதிபதி.

ஆண்டியாயினும் ஆறடுக்கு மாடியில் வாழ் சீமானாயினும், அவர் அலட்சியம் காட்டவோ, அச்சம் கொள்ளவோ கூடாது.

அவர் அமர்ந்திருக்கும் இடம். அனைவருக்கும் நியாயம் கிடைக்கச் செய்யும் திருக்கோயில்.

அங்கு அமர்ந்திருககும் நீதிபதி, டெலிபோன் ஒலிகேட்டதும் பேசுபவர் யார் என்று பார்க்கிறார், பேசுபவர் எவர் என்று தெரிந்ததும், பீதி ஏற்படுகிறது. தேவையற்ற முறையில், பணிந்துவிடுகிறார்.

வழக்கு மன்றங்கள், என்ன போக்கிலே உள்ளன என்பதை நீதிபதியின் நடவடிக்கை எடுத்துக் காட்டுகிறதல்லவா?

பயம் பிடித்தாட்டுகிறது நீதிபதியை, அவரைப் பயங்காட்ட எதிரில் வந்துகூட அல்ல – எங்கோ இருந்துகொண்டு – பணியவைக்கும் அதிகாரம் படைத்தவர் ஒருவர் இருக்கிறார்.

குற்றம் என்ன செய்தான்? யார் கண்டறிந்து கூறினவர்கள்? சான்றுகள் யாவை? இது குறித்துச் சட்டம் கூறுவது யாது? குற்றவாளி என்பவனுக்காக வாதாட வந்தவர் என்ன கூறுகிறார் என்ற இவைபற்றி, நீதிபதி அக்கறை காட்டவேண்டும். அவருக்கு வழி காட்ட, சட்டம்! ஆனால், சட்டத்தைப் பார்க்கா முன்பே, வேறொர் சக்தி டெலிபோன் மூலம் பேசுகிறது, நீதிபதி நடுங்கி நிற்கிறார்!)

நீதிபதி: (பணிவாக) ஆமாம், மேன்மை தங்கிய பிரபுவே வழக்கு ஆரம்பமாகப் போகிறது. நான் அவன் குற்றவாளி என்று கண்டறிந்து கூறி, அவனுக்கு மரணதண்டனை விதிக்கிறேன் – நிச்சயமாக, விரைவில்.

(டெலிபோனைக் கீழே வைக்கிறார், அமருகிறார். மற்றவர்களும் அமருகின்றனர்.)

(கவனித்தாயா தம்பி வழக்கை விசாரிக்கிறேன். குற்றம் செய்தவன் என்று எடுத்துக் காட்டப்பட்டு விட்டால், தண்டனை தரப்படும் என்று கூறவில்லை)

குற்றவாளி என்று கூறுகிறேன்! மரண தண்டனை தருகிறேன்! என்று அறிவிக்கிறார்.

குற்றவாளி, கூண்டுக்குக் கொண்டுவரப்படப் போகிறான். இதற்குள், அவனுக்கு மரண தண்டனை தந்துவிடுவதாக, நீதிபதி, வாக்களிக்கிறார் – பணிவுடன்.

ஏன்? டெலிபோனில் பேசியவரின் குறிப்பறிந்து நடந்திடவேண்டும் என்று நீதிபதி உணருகிறார்.

தன்னை ஆட்டிப்படைக்கம் அதிகாரம் பெற்ற ஒருவர் இருப்பதை அறிகிறார், அச்சப்படுகிறார்.

ஊருக்காக, உலகத்துக்காக, ஒப்புக்கு ஒரு விசாரணை ஏற்பாடாகி இருககிறதேயொழிய, குற்றவாளி என்று கொண்டு வரப்படுபவன் சொல்லப்படவேண்டயவன் – என்பதை, டெலிபோனில் பேசும் மேலவர் தெரிவிக்கிறார்.
அவர் மனமறிந்து நடப்பதற்கே, இவர் னீதிபதியாக இருக்கிறார். நிலைமை புரிகிறதா!)

(பத்திரிகைக்கு குறிப்பெடுத்தனுப்புபவர் ஒருவர், அங்கு இருக்கிறார். அவருடைய மேசை மீது உள்ள டெலிபோன் ஒலி கிளப்புகிறது)

குறிப்: பெருந்தகையே! டெலிபோனில் பேச அனுமதி தரவேண்டுகிறேன்.

நீதி: சரி பேசலாம்.

குறிப்: வணக்கம்! வணக்கம்! நான்தான் குறிப்பெடுப்போன். செய்தியா? நாடு கூர்ந்து கவனித்துவரும பரபரப்பூட்டும் வழக்குத் தொடங்க இருக்கிறரு. மிக்க அநுபவம் பெற்றவர், ஆற்றல் மிக்கவர், அரசுக்க ஆருயிர்த் தோழராக இருக்கும் அறிவாளர், வழக்கை நடத்திக் குற்றவாளிக்கு மரண தண்டனை தரத் ீதுர்மானித்துவிட்டார். விராசரணயா? இப்போது ஆரம்பமாகப் போகிறது. குற்றவாளியா? இன்னும் வரவில்லை. போலீஸ் அதிகாரி போயிருக்கிறார், கொண்டுவர. மரணதண்டனை – நிச்சயமாக, நீதி நிலைக்கும் – கட்டாயம்.

(பத்திரிகைக்கு, வழக்கின் முடிவுபற்றி, வழக்கத் தொடங்கு முன்பே, குறிப்பெடுப்போர், செய்தி அனுப்பிவிடும், வேடிக்கையைக் கவனித்தாயா, தம்பி!)

(போலீஸ் அதிகாரி, குற்றவாளியை இழுத்துக் கொண்டு வருகிறார். குற்றவாளி வருகிறான் என்று தெரிந்ததும், நீதிபதி, சுற்றுமுற்றும் பார்க்கிறார்; பரபரப்படைகிறார்; பயம் கொள்கிறார்.)

போலீ: பெருந்தகையே! இதோ, கைதி.

நீதி: இரு! இரு! பாதுகாப்புப் பலமாக இருக்கிறதல்லவா

போலீ: ஆமாம், பெருந்தகையே! போலீஸ் படை அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது. கூரைமீதும் சுவரோரங்களிலும் சுழல் துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளன.

நீதி: கைதியின் கரங்களுக்கு விலங்கிட்டீர்களா...?

போலீ: ஆமாம் . . . ஆமாம்...

நீதி: ஆனால் ... என்ன இழுத்துப் பேசுகிறாய், சொல்! சொல்!

போலீ: கரங்களில் விலங்கு மாட்டப்பட்டிருக்கிறது – பலமான விலங்கள். ஆனால், என்ன மாயமோ தெரியவில்லை, விலங்குகள் எப்படியோ, கழன்று நழுவி வந்து விடுகின்றன.

நீதி: கண்காணிப்பாக இருக்கவேண்டும்; தெரிகிறதா; அவன் கரத்திலிருந்து விலங்கு கழன்றால், உன் உடலிலிருந்து சிரம் கழன்று கீழே விழும்!
(நீதிபதியின் நடுக்கம்; அவர் பேசக் கேட்டதும் போலீஸ் அதிகாரிக்கு ஏற்பட்டுவிடும் ஒடுக்கம் தெரிகிறதல்லவா? போலீஸ் அதிகாரியை நீதிபதி மிரட்டுவதிலே, நகைச்சுவை காண்கின்றனர். வழக்கு மன்றத்திலுள்ளோர் சிரிக்கின்றனர். அவர் காதுபடப் புகழ்கின்றனர். சிக்கலான வழக்கை விசாரிக்கும்போதுகூட, நகைச்சுவையைக் காட்டிடும் திரற, நமது நீதிபதி இழுந்து விடுவதில்லை, என்கிறார், ஒருவர். பேரறிவாளரின் இயல்பே அதுதானே என்று பாராட்டுகிறார், மற்றொருவர்.

ஏதேது, இதை எல்லாம் கூடப் பத்திரிகையிலே வெளியிட்டு விடுவீர்கள் போலிருக்கிறதே என்று தூண்டுகிறார், நீதிபதி – ஆசையைக் கேட்வியாக்கிப் பேசிக்காட்டுகிறார்.

ஆமாம்! பத்திரிகையில் வெளிவரும் என்று வாக்களிக்கிறான் குறிப்பெடுப்போன்.

குற்றவாளி, கூண்டிலே நிறுத்தப்படுகிறான். நடுத்தர வயதினன் – எந்தக் கேடும் செய்திட இயலாகவன் என்பதைத் தோற்றமே காட்டுகிறது. புன்னகை செய்கிறான்.)

நீதி: குற்றவாளியைச் சோதனை செய்தாவிட்டதா?

போலீ: ஆமாம்.....

நீதி: எப்போது நடத்தினீர்கள், சோதனை?

போலீ: தொடர்ந்து! விடாமல்! மணிக்கு ஒரு தடவை வீதம்!

நீதி: ஆயுதம் ஏதும் வைத்துக்கொண்டில்லையே . . . இருந்ததா?
போலீ: தேடினோம் – கிடைக்கவில்லை. ஆனால், அவனே கூறுகிறான், ஆயுதம், அவன் தலையில் இருக்கிறதாம் – மண்டைக்குள்!!

(போலீஸ் பக்கத்திலே நின்று காவல் புரிகிறது. கூண்டிலே குற்றவாளி நிற்கிறான். என்ன நடந்த்ாலும் கவலையில்லை என்ற போக்கில்)
(குறிப்பெடுப்போன், தன் இதழுக்கு அறிவிக்கிறான்.)

குறி: (டெலிபோன் மூலம்) மயிர்க்கூச்செறியும் காட்சி. பேயன், பிடித்திழுத்துவரப்பட்டிருக்கிறான். கூண்டிலே நிற்கிறான் கொடியவன்!! பயங்கரமான தோற்றம், ஆனால் கடமையைக் கலங்காது செய்திடும் நீதிபதி, கைதிக் கூண்டில், தனக்கு மிக அருகாமையில், அந்தக் கொடியோன் இருப்பினும், துளியும் கலங்காது, அமர்ந்திருக்கிறார். அவருடைய அஞ்சாநெஞ்சம் கண்டு அவனி புகழ்கிறது.

நீதி: (வழக்கினைத் தொடுத்திடும் வழக்கறிஞரைப் பார்த்து) இனித் தொடங்கலாம்...

தொடுப்: பெருந்தகையே! இவன் மீது சாட்டப்பட்டுள்ள குற்றம், எவ்வளவு கொடியது, ஈனத்தனமானது, ஆபத்தானது, அழிவு தருவது என்பதைத் தாங்கள் அறிவீர்கள்.

நீதி: குற்றம் கொடியதே! அறியாதார் யார்?

தொடுப்: சட்ட நிபுணர் தாங்கள்! நீதியின் காவலர் தாங்கள் அறியாததும் உண்டோ?

நீதி: இவன் செய்த குற்றம்?

தொடுப்: சுயசிந்தனை! தானாகச் சிந்திக்கிறான்! எண்ணிப் பார்க்கிறான்!

(நீதிபதி கடுங்கோபங்கொள்கிறார். வழக்கு மன்றத்திலிருப்போர், பதறுகிறார்கள். பெண்கள் பீதி அடைகிறார்கள்; ஆடவர் ஆத்திரமடைகிறார்கள். குற்றவாளியைச் சுட்டுத் தள்ளுவது போலப் பார்க்கிறார், நீதிபதி)

நீதி: சுய சிந்தனையா! உம்! எப்போது, அப்படிச் சிந்திக்கிறான் இந்தச் சண்டாளன்.

தொடுப்: எப்போதும் அதே வேலைதான், இந்த அக்ரமக்காரனுக்கு. வீட்டில்! தொழிற்கூடத்தில்! பத்திரிகை படிக்கும்போது!

நீதி: அதிலே எழுதப்ப்ட்டிருப்பதை நம்பவில்லை – யோசிக்கிறான் – எண்ணிப் பார்க்கிறான்!

தொடுப்: அது மட்டுமல்ல! நமது புனிதத் தலைவர்கள் சொற்பொழிவு மூலம் உபதேசம் செய்கிறார்களே, ஊர் வாழ, உலகு வாழ. அப்போது கூட, இந்த அயாக்கியன் அவர்கள் கூறுவது சரியா, தவறா? என்று யோசிக்கிறான்.

நீதி: கேட்டீர்களா, கற்றறிந்தோரே! வழக்கினைத் தொடுத்து, விளக்கம் ஏடுத்துரைக்கம் நண்பர், வம்பு தும்பு பேசுபவர் அல்ல – வழக்கறிஞர் – திறமை மிக்கர், சான்றுகளின்றிப் பேசமாட்டார்! பேச்சினை எவரும் மறுத்திட முடியாது! ஆணித்திறமான பேச்சு. அவர் கூறிவிட்டார். இந்த அற்பன் செய்த குற்றத்தினை கண்கண்ட கடவுளராம் நமது நாட்டுத தலைவர்கள், பேசுகிறார்கள்; கேட்டு இன்புற்று நல்வழி நடவாமல், இவன், ஐயம் கொள்கிறான் – பெரியோர்களே! எத்துணைப் பேய்குணம் இவனுக்கு! காலம் இப்படியுமா கெட்டுப போகவேண்டும். நமக்கு அமைந்துள்ள நல்லாட்சியில், எதைப் பற்றியும் நாமாகவே எண்ணிப் பார்த்து உண்மையை உணர்ந்திடும் தொல்லையைத் துளியும் நமக்குத் தராமல், நமது அரும்பெரும் தலைவர்கள் அயராது உழைத்து, எண்ணங்களைச் சமைத்தெடுத்துச் சுவைபடத் தருகின்றனர்! தொட்டிலிலிருந்து சுடுகாடு வரையில் நமக்குத் துணையாக, நமது தலைவர்கள் தயாரித்துத் தருகிற, ‘உபதேசம்’ இருக்கிறது. வீட்டிலே இருந்தாலும், அலுவலகம் சென்றாலும், எங்கே இருந்தாலும். துளியும் கஷ்டமின்றி, எல்லாவற்றைப் பற்றியும், நாம் என்ன எண்ண வேண்டுமோ அதனை, ஆட்சியில் அமைந்துள்ள புண்ய புருஷர்கள், தயாரித்துக் கொடுக்கிறார்கள் – ஆனால் இவன், இந்தக் கொடியவன், நம் தலைவர்களின் பேச்சைக் கூடத் துச்சமென்று கருகிறான் – சுயமாகச் சிந்திக்கிறான். நாடு செய்த தவத்தின் நற்பயனாகக் கிடைத்துள்ள நமது தலைவர்கள் ஏதேனும் கூறினால், ஆர அமர யோசித்துப் பார்த்தறிந்த உண்மையாகத்தானே இருக்கும்; நமது நல்வாழ்புக்கானதாகத்தானே இருக்கும்! நன்றியுடன் அதனை ஏற்றுக் கொள்ளாமல், இவன், அவர்கள் சொல்வது சரியா, தவறா என்று சிந்திக்கிறான் இவன்!! நமது தலைவர்களை விட இவனுக்குச் சிந்தனா சக்தி அதிகமோ? எவ்வளவு கடைந்தெடுத்த கயவனாக இருந்தால், இவன் தலைவர்கள் பேச்சைப்பற்றி, ஆராயத் துணிவான்! உம்! இருக்கட்டும்! ஏ! கெடுமதியாளனே! குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா? மறுக்கிறாயா?

கைதி: குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்.

நீதி: நாட்டுக்கு நாம் விளைவிக்கும் இந்தத் துரோகத்தைச் செய்ததாக ஒப்புக்கொள்கிறாய்?

கைதி: சுயமாகச் சிந்தித்தேன் – ஒப்புக்கொள்கிறேன் குற்றத்தை

தொடுப்: நமது அரசு நமக்காகச் செய்துள்ளவைகளை மறந்து,துரோகம் செய்கிறாய்?

கைதி: மறந்ததால் அல்ல! நமக்காக நமது அரசு செய்வதை எல்லாம் கண்டதால், நானாக எண்ணிப்பார்த்து உண்மையைக் கண்டறிய விரும்பினேன்.

தொடுப்: சட்டத்தை மீறுகிறாய் – தெரிகிறதா உனக்கு.

கைதி: கூறுகிறீர்களே! தெரிகிறது! ஆனால் எந்தச் சட்டத்தை நான் உடைக்கிறேன்?

தொடுப்: எந்தச் சட்டமா? நாட்டை வாழவைக்க நமது தலைவர்கள் இயற்றிய சட்டம்.

கைதி: நாட்டை வாழவைக்கவா? வாழ்கிறதா, நாடு வாழ்கையா நாம் நடத்துவது...?

நீதி: குழப்பமோ இவனுக்கு மனதில்...

கைதி: ஆமாம்... குழப்பம்...

நீதி: ஏன் ஏற்படுகிறது?

கைதி: தானாக ஏற்படவில்லை. ஒருவன் புகுத்துகிறான், என் உள்ளத்தில்...

நீதி: யார் அவன்? தேவதையோ?

கைதி: தேவதை என்று நான் முதலில் எண்ணிக் கொண்டேன். பிறகு தெரிந்தது, தேவதை அல்ல – புசாசுக்குட்டி! என்று.

நீதி: குட்டிப் பிசாசா...?

கைதி: ஆமாம்! ஓயாமல் என்னைப் பிடித்தாட்டுகிறது. அந்தக் குட்டிப் பிசாசு! நான் மேலங்கி அணிந்தோரை மேதாவிகள் என்று எண்ணும்போது, காவி தரிதோரைக் கடவுளின் அடியவர் என்று நினைக்கும்போது, பத்திரிகைகளை அறிவை அளித்திடும் அற்புதப் பணிபுரியும் திருத்தூதர்கள் என்று கருதும்போது, இந்த குட்டிப் பிசாசு, உள்ளே புகுந்து குடைகிறது! குத்தி கிளறுகிறது, என் சிந்தனையை! எல்லாம் ஏமாற்று வித்தை, தெரியவில்லையா? என்று கேட்கிறது. புரட்டு விளங்கவில்லையா? எண்ணிப்பார்! என்று கூவித் தூண்டுகிறது.

நீதி: உன் கண்ணால் கண்டாயா அந்தக் குட்டிப்பிசாசை ...... எங்காவது?

கைதி: எல்லா இடத்திலும் காண்கிறேன்! இங்கம் இல்லை என்று எப்படிக் கூறமுடியும்?
(சிரிப்பொலி கேட்கிறது. சிறியதோர் உருவம் வருவது தெரிகிறது. கைதியிடம் சென்று குலவுகிறது)

(தம்பி! குட்டிப் பிசாசு என் உள்ளத்தில் புகுந்து, என்னைச் சிந்திக்கவைக்கிறது, என்ற கைதி கூறிதாக, நூலெழுதியவர் எடுத்துக காட்டுவதிலே தனியானதோர் சுவை இருக்கிறது. சிந்தனை என்பதை நம்பிக்கைக்கு நாசம் விளைவிப்பது என்று எதேச்சாதிகாரிகள் – மத ஆதிக்கக்காரர்கள் கூறிவருவர்.
நம்பிக்கை என்பது கடவுள் ஊட்டுவது என்றும், சந்தேகம் சிந்தனை, இவைகள் ‘சாத்தான்’ ஏவிவிடுவன என்றும் தேவாலயத்துக் கோமான்கள் கூறுவர்.
நம்பிக்கை, அடக்க ஒடுக்கத்தைத் தரும்; சிந்தனை துணிவை, தன்னிச்சையாக நடந்திடும் போக்கினை மூட்டிவிடும் – கடவுளின் ஆற்றலை அலைக்கழிக்க சாத்தான் செய்திடும் சூழ்ச்சியாகும், அதைச் சிந்தனை; எடனறு கூறிவந்தனர், ஜெபமாலையின் துணையைச் செங்கோலுக்கு அளித்து அரசோச்சி வந்தவர்கள். அந்த நிலையைச் சுவைபட எடுத்துக் காட்டத்தான் ‘சிந்தித்தான்’ என்ற குற்றம் சாட்டப்பட்டவன் தன் சிந்தகைக்கும் பொறுப்பு, தானல்ல, ஒரு குட்டிப் பிசாசு என்று குத்திக்காட்டிப் பேசுகிறதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

நீதி: வழக்குத் தொடுப்போரே! குற்றவாளியின், மனம் குழம்பிக்கிடப்பதற்கு, மருத்துவர் சான்றளிக்க வருவாரா?

தொடுப்: மருத்துவத் துறைத் தலைவர் வந்திருக்கிறார்; குற்றவாளி மிகப் பயங்கரமான, பைத்தியக்காரன் என்பதை எடுத்துக் கூற அனுப்பப்பட்டிருக்கிறார்!

நீதி: சரி! மருத்துவ நிபுணரை அழைத்து வாரும்...

(நீதிபதியை டெலிபோன் அழைக்கிறது. பேசி முடித்ததும்)

நீதி: குற்றவாளியே! உன் ஆணவம், அறிவீனம், அரசுக்கு நீ இழைத்த துரோகம். அதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு பேசிய மண்டைக் கர்வம், ஆகியவை பற்றிப் பலபக்கங்கள் விரிவாகவும் விளக்கமாகவும் எழுதி, உன் மனைவி மக்களுக்குத் தரப்படும் – படித்திட – பாடம் பெற்றிட, இப்போது, எழுத நேரமில்லை. துரிதமாக நடவடிக்கை எடுத்தாகவேண்டும். போலீஸ் காவலர்காள்! குற்றவாளியைப் பிடித்திழுத்துச் சென்று தூக்கிலிட்டுக் கொன்று போடுங்கள்.

(கைதியைப் போலீஸ் அதிகாரிகள், இழுத்துச் செல்கிறார்கள். வழக்கு முடிந்தது! நீதி வென்றது! குடற்றவாளிக்குத் தூக்குத்தண்டனை.....)

தொடுப்: பெருந்தகையே! ஒரு விஷயம் – சிறிய விஷயம்தான் – எனினும், செய்வன திருந்தச் செய் என்பார்களல்லவா? அதற்காக....

நீதி:செய்யவேண்டியதைச் செய்தாயிற்றே!

தொடுப்: முடிவு சரியானதே! முறையிலே, ஒரு சிறு குறை! குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கு முன்பு, மருத்துவ நிபுணரின், சான்று பற்றிக் குறிப்பிட்டீர்கள். அவர் வருவதற்குள்....

நீதி: அவர் வந்திருந்தாலும், முடிவு இதேதான்! சரி! அதனால் என்ன? குற்றவாளி இறந்துபடுகிறான் என்பதால், நாம் முறையிலே குறைவைப்பானேன்! மருத்துவ நிபுணரின் கருத்தினை கேட்டறிவோம் – இப்போது.

(மருத்துவ நிபுணரின் கருத்தறிந்து, குற்றவாளி, பித்தனா அல்லவா என்பதைக் கண்டறியத்தான், ‘முறை வகுத்தார்’ நீதிபதி. ஆனால், டெலிபோன் மூலம், அவருக்கு ஆணை பிறந்து விட்டது – ஒருவனுக்கு மரண தண்டனை விதிக்க இவ்வளவு நேரம் பிடிக்க வேண்டுமா? என்ற கேட்டுவிட்டார், மேலோர். ஆகவேதான், தீர்ப்பைத் தந்துவிட்டு, முறையைக் குறையுள்ளதாக்க வேண்டாம் என்பதற்காக மருத்துவ நிபுணரை அழைத்துப் பேசவைக்கிறார் நீதிபதி)

தொடுப்: செத்தொழிந்தானே குற்றவாளி, அவன் உயிரோடு இருந்தபோது புத்தி தடுமாறாது இந்தானா, பித்துப் பிடித்துக் கிடந்தானா?

மருத்: பொல்லாத பைத்தியக்காரனாகத்தான் இருந்தான்.

நீதி: மூளை கெட்டுவிட்டிருந்ததோ?

மருத்: ஆமாம்....

நீதி: மூளை, நோயினால் கெட்டுவிட்டதோ?

மருத்: ஒரு கிருமி – நச்சுப் பூச்சியினால், மூளை கெட்டுக் கிடந்தது.

மருத்: ஆதாரம் அப்பழுக்கின்றி இருக்கிறது. செத்தொழிந்தானே, அவனுடைய மூளையைக் கெடுத்த, அந்த நஞ்சுப் பூச்சி புத்தம் புதியதல்ல. அது இக்காலத்தைவிட, ஆன்றோர்கள் காலத்தில், மிக அதிக அளவிலே இருந்ததுண்டு. பழம்பெரும் நகரான ஏதன்சில், இந்தப் பூச்சிகள் ஏராளமாகக் கிடந்தன பாலஸ்தீன் நகரிலே கூட! ஐரோப்பிய பூபாகத்தில், இந்தப் பூச்சியைக் கசக்கியும் நசுக்கியும் வைத்தனர். முன்பு இந்த அளவுக்கு, அவைகளின் தொல்லை இப்போது கிடையாது. கட்டுப்படுததப்பட்டிருக்கிறது.

தொடுப்: அந்த நஞ்சுப் பூச்சி தீண்டி நோய் கண்டுவிட்டால், நோய் என்றென்றம் போகாதோ?

மருத்: ஒருக்காலும், நோய் போகாது.

தொடுப்: நோயின் குறிகள் யாவை?

மருத்: கண்களிலே புத்தொளி, சுறுசுறுப்பான நடவடிகக், எளிய வாழ்க்கை, அச்சமற்ற போக்கு, சுகபோகத்தில் பற்று அற்ற நிலை.

தொடுப்: கொல்லப்பட்டனே, அவனிடம் இநதக் குறிகள் கண்டீரா?

மருத்: அதை ஏன் கேட்கிறீர்கள்! நோய் முற்றிப்போன நிலை அல்லவா, அவனுக்கு.

நீதி: அப்படியானால், அந்த நோயாளி கொல்லப்பட்டது, சமூகத்துக்கு மிகப் பெரிய நலன் தரும் செயல் – அல்லவா?

மருத்: ஐயமென்ன!! ஐயமென்ன!!

(குற்றவாளியைக் கொல்லப் பார்க்கிறார்கள்! அவனைச் சாகடிக்க முடியவில்லை. ஓடோடி வந்து, நீதிபதியிடம் கூறுகிறார்கள். அவர் பதறுகிறார். ஆணையிடுகிறார்! ஆர்பரிக்கிறார். வெட்டு! குத்து! கொளுத்து! பிய்த்தெறி! எதையோ செய்! ஆனால் அவன் சாகவேண்டும்! என் தீர்ப்பு நிறைவேற்றப்படவேண்டும் என்று கூச்சலிடுகிறார். காவலர் வெளியே செல்கின்றனர்)

நீதி: (கிலிகொண்ட நிலையில்) மருத்துவ நிபுணரே! இந்த நோய், தொத்திக்கொள்ளக் கூடியதோ?

மருத்: பொல்லாத தொத்து நோய்! ஏதன்ஸ் நகரிலிருந்து, இந்த நோய், பரவிப் பரவிப் பரவி, ஐரோப்பிய பூபாகத்தையே கப்பிக் கொண்டது. நமது நாகரிக நகர்களில், மாற்று மருந்துகள் ஆட்சியாளர் தயாரித்து அளிப்பதால், நோய் பரவுவது தடுக்கப்பட்டு வருகிறது.

நீதி: கிடக்கட்டும், குற்றவாளி இங்க வந்திருந்தானே – தொத்து நோய் என்கிறீரே – நம்மை பிடித்துக் கொண்டிருக்குமோ?

மருத்: இருக்கும்.
நீதி: அவன் உயிருடன் இருந்தால்தானே, நோய் தொத்திக் கொள்ளும். அவன் தான் செத்தானே!

மருத்: ஐயோ! ஆபத்து அப்போதுதான் அதிகம். அப்படிப்பட்டவர்களின் சக்தி உயிரோடு இருந்தபோது இருப்பதைக் காட்டிலும், செத்த பிறகு அந்தச் சக்தி பலமடங்கு அதிகமாகிவிடும்

நீதி: நோயை நீக்க, வழியே இல்லையா....?

மருத்: இருக்கிறதே! தாங்கள் கண்ட வழி! சாகடிப்பது!

நீதி: என்ன, மருத்துவ நிபுணரே! ஒரு தினுசாகப் பேசுகிறீர்.

மருத்: உண்மையை உரைக்கிறேன்! பெருந்தகையே! என்னை அந்த நோய் தொத்திக் கொண்டது!

தம்பி! மருத்துவ நிபுணருக்கு, தன்னை வரவழைத்துக் கேட்டு உண்மை என்ன என்ற கண்டறியாமலே, குற்றவாளிக்கு நீதிபதி மரண தண்டனை தந்தால் மனம் கொதித்திருக்கிறது.

சட்டத்தையும் ஒரு பக்கம் ஏடுகளாக்கி வைத்துக்கொண்டு, படு கொலையை நீதிபதி செய்கிறாரே! ஆட்சி இதனை அல்லவா, முறையாக்கி வைத்திருக்கிறது என்ற எண்ணுகிறார் – அவர் உள்ளத்தில் உறங்கிக் கிடந்த, நேர்மை எழுந்து நின்று அவரை ஆண்மையாளராக்கி விடுகிறது. பூச்சி – அது கிரேக்க நாட்டில் ஏதன்ஸ் நகரிலே நிரம்பி இருந்தது என்ற மருத்துவர் கூறுவதன், உட்பொருள். கொடுங்கோலர் செய்யக் கூடிய கொடுமைகளுக்கு அஞ்சாமல், நெஞ்சுரத்துடன் சிந்தனையாளர், ஏதன்ஸ் நகரில் நிரம்ப இருந்தனர் – அவனி எங்கம் அறிவு பரப்பினர் – சர்வாதிகரிகளின் காலத்திலேதான், சிந்தனையைச் சாகடிக்க முயற்சிக்கிறார்கள் – அதுவும் நடவாது என்பதாகும்.

சிந்தனையாளர், கொடுங்கோலரின் சீற்றத்தால் தாக்கப்படுவது காணும்போது, எவருக்கும் அவர்பால் பற்று ஏற்பட்டு விடும் – சிந்தனையாளர் ஆகிவிடுவர் என்ற கருத்தை விளக்கத்தான், குற்றவாளிக்கு இருந்தது தொத்து நோய், என்ற கூறினார்.
அநியாயமாக ஒருவனை அறிக்கிறீர்கள். அவன் ஆன்றோர் காலமுதல் அழிந்துபடாமல் இருந்துவரும் சிந்தனைச் செல்வத்தைப் பறிகொடுக்க மறுத்த காரணத்தால் – அவன் சாகத் துணிகிறான், சிந்தனையை இழக்க மறக்கிறான் – அவனன்றோ ஆன் மகன் – அவன்போல் அனைவரும் இருந்திவேண்டும் – இதோ இனி நான், அவன் போலத்தான்! என்ற கருத்தை விளக்கத்தான், அந்த மருத்துவ நிபுணர், என்னையும் அந்த நோய் தொட்டுவிட்டது என்று கூறினார்.

பதறிய நீதிபதி, மருத்துவ நிபுணரைக் கைது செய்யும்படி போலீஸ் அதிகாரிக்குக் கட்டளையிடுகிறார். அவனும் மறுத்து விடுகிறான்! தொத்து நோய்!!

வழக்குத் தொடுப்போனைக் கூவி அழைக்கிறார் நீதிபதி. அவன் மட்டும், என்ன! நாம் நடத்தியது வழக்கு விசாரனை அல்ல! கேலிக் கூத்து! நான் ஓர் சுயநலக்காரன் – போலீஸ் காவலர், விசை கொடுத்தால் ஆடும் பதுமை – செய்தி தருவோன் பொய்யன் புரட்டன் – தாங்களோ, ஓர் கோமாளி.
பிடியுங்கள்! அடையுங்கள் சிறையில்! பொல்லுங்கள் துரோகியை! என்ற ஆத்திரத்துடன், நீதிபதி அலறுகிறார்.

சட்டம் படித்தேன், பகலும் இரவும்! எதற்கு, பாதகம் புரிந்திட படுகொலைக்கு உடந்தையாக இருக்க!! உண்மையை உணருகிறேன். உயிர் பெரிதல்ல! வாழ்க்கை பெரிதல்ல! நான் இப்போது வாழ்ந்து கொண்டும் இல்லை! என்று உருகிப் பேசுகிறான். வழக்குத் தொடுத்தோன்.

பொய்! பொய்! நான் இதுவரை, வெளியிடச் சொல்லி அனுப்பிய அவ்வளவு செய்தியும் அண்டைப் புளுகு. நாங்கள் மனிதர்களே அல்ல! மானமற்றவர்கள்! மதியற்றவர்கள்! கதியற்றவர்கள்! இங்கு ஒரே ஒரு மனிதன் இருந்தான் – குற்றவாளிக் கூட்டில்! ஒரே ஒரு விடுதலை வீரன் இருந்தான் – கரங்களில் விலங்குகள் பூட்டப்பட்டு மற்றவர் அனைவரும் மாமிசப் பிண்டங்கள்! மனிதக் கழுகுகள்!

இவ்விதமெல்லாம் செய்தி தருகிறான் இதழுக்கு - நோய் முற்றி விட்ட நிலை அவனுக்கு!

நீதிபதிக்கும், இலேசான நோய் பிடித்துவிடும் போலாகிறது.

ஆனால், டெலிபோன் ஒலி கிளம்புகிறது! ‘மேலவர்’ பேசுகிறார் – நீதிபதி பதறுகிறார்.

“நச்சுப் பூச்சி தீண்டியதால், இங்கு அமைனவருககம் திடீர் என்று நோய் கண்டுவிட்டது. இப்போது பரவாயில்லை. இதோ தொடர்ந்து நடவடிக்கை எடுத்துக் கொள்கிறேன்!” என்று கூறிவிட்டு மற்றவர்களை அழைக்கிறார்.

“பிள்ளை குட்டிகளைக் கவனியுங்கள்! பிழைப்பைக் கெடுத்துக்கொள்ளாதீர்கள்! மேலவர் மெத்தக் கோபத்துடன் இருக்கிறார்.”


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai