தம்பிக்கு அண்ணாவின் கடிதம்

பொருத்தம் – 1
பேரறிஞர் அண்ணா
(காஞ்சி)


காஞ்சிக் கடிதம் – அறிஞர் அண்ணா

பெருத்தம் என்றால் என்ன?

ஆன பிறகே பொருத்தம் இல்லை என்பார் அதிகம்

கவர்ச்சிக்கு இலக்கணமே இல்லை!

பொருத்தம் நீருக்கும் நெய்க்கும் இல்லை, நீருக்கும் பாலுக்கும் உண்டு!

விஞ்ஞானமே பொருத்தமற்றதையும் பொருத்தமுள்ளதாக்க கூடியது.

பழந்தமிழர் தெளிவாகத் தெரிந்திருந்த பொருத்தங்கள்.

தம்பி,

சிறப்பு நிகழ்ச்சிக்கான நாள் குறிக்கப்பட்டான பிறகு அந்த நிகழ்ச்சியின் அமைப்பாளர் நண்பர் டி.கே.சீனுவாசன், நான் எந்தப் பொருள் குறித்து – எந்தத் தலைப்பில் – பேச இருக்கிறேன் என்று கேட்கலானார். பிடிகொடுக்காமல் இருந்து பார்த்தேன். இயலவில்லை. சிற்ப்புச் சொற்பொழிவு என்றால் ஏதேனும் ஓர் தனிப்பொருள் குறித்து, தனித் தலைப்பிட்டுப் பேசுவதுதான் 'பொருத்தம்' என்ற எண்ணம் நண்பருக்கு; அவர் விளக்கிக் கூறவில்லையே தவிர, ஏதாவது ஒரு பொருள் பற்றிப் பேசவேண்டும் என்பது பற்றி அவர் வலியுறுத்தியதிலிருந்து நானாக அவருடைய நோக்கத்தைப் புரிந்துகொண்டு, 'பொருத்தம்' என்ற பொருள் குறித்துப் பேசுவதாகக் கூறினேன்; கூறியான பிறகுதான் பொருத்தம் என்ற அந்த எளிமையான சொல்லுக்குள்ளே என்னென்ன ஒளிந்துகொண்டுள்ளன என்பதனை எண்ணிப் பார்த்தேன்; ஏ! அப்பா! ஒரு சிறப்புக் கூட்டத்திலே சொல்லி விளக்கிவிடக் கூடியதாகவா இருக்கிறது, 'பொருத்தம்' பற்றிய விளக்கம்! காலமெல்லாம் பேசிக்கொண்டிருந்தாலும், சொன்னவைகளைவிடச் சொல்ல வேண்டியவைகளின் அளவே அதிகம் என்றுதான் எவரும் கூறவேண்டி நேரிடும்.

மிக நெடுந் தொலைவிலே உள்ள கோளங்களை இங்கிருந்து காணும்போது எத்துணை சிறிய அளவினதாகத் தெரிகின்றன; ஆனால் விஞ்ஞானிகள் அறிந்து கூறுகிறார்கள் அல்லவா, சில கோளங்கள், பூமியைவிட எத்தனையோ மடங்கு பெரியவைகள் அளவில் என்று.

ஐந்தே எழுத்துக்களாலான சிறிய சொல், 'பொருத்தம்' ஆனால் பெருள்பற்றி ஆராய ஆராய விரிகிறது விரிகிறது அத்தனை பெரிதாக – கோளம் போல. பொருளினைக் கண்டறியக் கண்டறிய நாமே ஒரு கட்டத்தில், ஒது நம்மாலே ஆகிற காரியமல்ல, இந்த வேலைக்கு நாம் பொருத்தமல்ல என்ற கூறிடவேண்டி வரும். ஆனால், நமது செவிகளில், தம்பி! மிக அதிகமாக விழுகிற சொல் இந்தப் 'பொருத்தம்' என்பது. நாமே அடிக்கடி இந்தச் சொல்லைப் பயன்படுத்துகிறோம், இந்தச் சொல்லின் நடமாட்டம் மிக அதிகம். காதிலே வீழ்ந்ததும், எளிய சொல் என்று தோன்றுகிறது; பொருள் என்ன இதற்கு என்றுகூடப் பெரும்பாலும் கேட்கத் தோன்றுவதில்லை; பொருத்தம் என்றால் தெரியாதா, பொருத்தம் என்று கூறிவிடுகிறோம். தன்னாலே விளங்கிவிடும் ஒரு சொல்லுக்கு விளக்கம் வேறு தனியாகத் தரவேண்டுமா என்ற எண்ணத்தில்.

வன்கணாளர்
இடுக்கண்
உடுக்கள்

இப்படி உள்ள சொற்கள், கடினமானவைகளாக, பொருள் அறிந்தாக வேண்டும் என்ற எண்ணத்தைக் கிளறுவனவாக உள்ளன; தோன்றுகின்றன. அனால், பொருத்தம்! இதற்கு இன்னொருவரிடம் பொருள் கேட்க வேண்டுமா! என்று எண்ணிடச் செய்கிறது. ஆனால், இத்துணை எளிதா – எண்ணிப் பார்த்திடேன்.

அவனுக்கு அவள் துளி கூடப் பொருத்தமில்லை.

சொல்கிறோமல்லவா. ஆம். என்கிறாய். ஆனால் தம்பி. நமக்குள்ளே பேசிக்கொள்வதிலே தவறு என்ன, உண்மையில், அப்படிச் சொல்வதில்லை.

அவளுக்கு அவன் துளிகூடப் பொருத்தமில்லை.

என்றுதான் பெரும்பாலும் பேச்சு! கூச்சப்படாதே. தம்பி! வாடிக்கையான பேச்சு, இது. சொல்பவரின் கண்களுக்கு 'அவர்களுக்குள்' உள்ள பொருத்தம் தெரிவதில்லை; அதனால் எழும் பேச்சு அது; கெட்ட நினைப்பிலே எழுவது என்று கூடக் கூறுவதற்கில்லை.

அந்த வேலைக்கு அவன்தான் பொருத்தம்.

பொருத்தம் இல்லையாம், சொன்னார்கள்!

பொருத்தம் சரியாக இருக்கிறதா என்று பார்க்க வேண்டாமா!

பொருத்தமானவனாகப் பார்த்தாகவேண்டும்.

பொருத்தமான வேளை அல்லப்பா, இது!

ஒன்றுக்கொன்று பொருத்தம் இருக்கவேண்டுமே.

பொருத்தமான பேச்சாகப் பேசு.

இப்படிப் பலப்பல – அடிக்கடி – எங்கும். இவை ஒவ்வொன்றுக்கும் பின்னணியில் சொல்பவர்களின் விருப்பு வெறுப்பு தொக்கி இருக்கிறது.

அழைப்பின் பேரில் திருமண வீடு செல்கிறான்; வாழ்க்கையில் வசீகரம் எண்ணி ஏங்கிக் கிடப்பவன் அல்லது ஏமாற்றமடைந்தவன், தன்னிடம் உள்ள வனப்புக்கு ஏற்றவிதமான 'துணைவி'யல்ல தன் இல்லத்தரசி என்ற எண்ணம் – பெரும்பாலும் தவறான எண்ணம் கொண்டவன். அவன் தன்னைப் போன்ற நினைப்பினனுடன் பேசும்போது சொல்கிறான்.

அவளுக்கு அவன் பொருத்தமானவனே அல்ல

என்று. 'அவள்' அழகி! 'அவன்' அப்படியல்ல! இது 'இவன்' எண்ணம்! என்ன 'இவன்' அளவுகோல்! ஒன்றும் இல்லை! 'இவன்' மனத்திலே உள்ள விருப்பு வெறுப்பு, சலிப்பு கசப்பு, இவற்றின் விளைவு அந்தப் பேச்சு.

பொருத்தமானவனா அல்லவா என்பது குறித்து அறிந்து கொண்டாக வேண்டியவர்கள், தமது திறமைக்கேற்ற விதத்தில் ஆராய்ந்து பார்த்தாகி விட்டது; அதற்குப் பிறகே, மணமேடையில் மணமக்கள் அமர்ந்திருக்கிறார்கள்; மாலை மாற்றிக் கொள்வதைக் கண்டுகளிக்கவும்(முடியுமானால்!) வாழ்த்தவும் (தெரியுமானால்!!) வந்துள்ளவன் சொல்கிறான்.

அவளுக்கு அவன் துளியும் பொருத்தம் இல்லை

என்று! யாரோ இவன் கருத்தைக் கேட்டதாலே, அல்ல! கருத்துத் தெளிவுள்ளவன் என்ற விருது பெற்றவன் என்பதாலே அல்ல! இவன் கருத்து என்ன என்று கண்டறிந்து பிறகே திருமண ஏற்பாட்டினை மேற்கொள்ளப் போகிறார்கள் என்ற நிலை இருப்பதால் அல்ல! கெட்டிமேளம் கொட்டியாயிற்று! தொட்டுத் தாலி கட்டிவிட்டான். பிறகு, பேசுகிறான்.

பொருத்தம் இல்லை
என்று!

தம்பி! அவனுக்கும் அவளுக்கும் பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்பது இருக்கட்டும ஒரு புறம்; இவன் பேசுகிறானே அந்தப் பேச்சு, பொருத்தமானதா? துளிகூட இல்லை.

பொருத்தமறிந்து பேசவில்லை.

பொருத்தமான நேரத்தில் பேசவில்லை.

பொருத்தமானவன் பேசவில்லை.

மணமேடையில் அமர்ந்துள்ளவர்களைப் பார்த்தான பிறகு,

அவளுக்கு அவன் துளிகூடப் பொருத்தம் இல்லை என்று பேசுகிறான்!!

அவளுக்கு அவன் துளிகூடப் பொருத்தம் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும், அந்த எண்ணம் யாருக்கு ஏற்படவேண்டுமோ, எந்த நேரத்தில் ஏற்படவேண்டுமோ, அந்த நேரத்தில் ஏற்பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். இவனுக்கு, இலைபோடும் வேளையில் இந்த எண்ணம் ஏற்பட்டு என்ன பயன்? துளியும் இல்லை.

இதுபோலத் தம்பி! பொருத்தம் பற்றித் துளியும் பொருத்தமற்ற முறையில் பொருத்தமற்றவர்கள் பொருத்தமற்ற வேளையில் பேசிக்கொள்கிறார்களே. அதுதான் நமது செவிகளிலே நிரம்ப விழுந்திருக்கிறது. புரிகிறதல்லவா!! நாமும், பலமுறை, ஆழ்ந்த சிந்தனையற்று, ஆமாமாம்! என்று சொல்லியிருந்திருப்போம். மறுக்கமாட்டாயல்லவா?

மங்கைக்கேற்ற மணாளன் அமையவேண்டும்; இல்லையென்பார் இல்லை. ஆனால், அதற்கான முறை, அந்தக் கடமையை மேற்கொள்ள வேண்டியவர்கள், அதற்கான நேரம் எது? மணமக்கள் மாலை மாற்றிக் கொண்டான பிறகா! முதல் பந்தியா, இரண்டாம் பந்தியா! முந்திரிப்பருப்பு பகோடாவா, மோர்க்குழம்பு வடையா! என்ற பேச்சோடு பேச்சாகப் பேசித் தீர்க்கவேண்டிய பிரச்சினையா இது? இல்லையல்லவா! ஆனால், பேசுகிறார்களே! கேட்டிருக்கிறாயே. ஆக, பேசுபவர்களும் சரி, கேட்பவர்களும் சரி, பொருத்தம் என்பது பற்றி ஆர அமர எண்ணிப் பார்த்தவர்கள்தானா? இல்லை, அத்தகையவர்கள் கூறிடுவதைக் கொண்டு,

பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்று தீர்ப்பளிக்க முடியாது.

பொருத்தம் பார்ப்பது – அதுபற்றிக் கூறுவது அறிந்து கொள்வது சாதாரணமல்ல! மிகக் கடுமையான காரியம்; பக்குவம், பயிற்சி, தெளிவு, விருப்பு வெறுப்புக்கு ஆளாகாமை இவ்வளவும் நிரம்பவேண்டும். பொறுப்பான காரியம். ஆனால் இதனைத்தான், மிக எளிதாக, விநாடிக்கு விநாடி செய்துகொண்டிருக்கிறார்கள்; வேறு யாரையோ சொல்லுவானேன், தம்பி! நாமே செய்து கொண்டிருக்கிறோம்!

பொருத்தம் என்பதுபற்றி நன்றாகச் சிந்தித்துப் பார்க்காமல், பொருத்தம் என்றால் என்ன என்பது பற்றிய விளக்கத்தைப் பெற்றுக் கொள்ளாமல், பொருத்தம் இருக்கிறதா இல்லையா என்பதனைக் கண்டறியும் முறை அறியாமல், தெளிவு பெறாமல், பயிற்சி பெறாமல், பொருத்தம் எது என்பதைக் கண்டறியும்போது, விருப்பு வெறுப்பு நீக்கிக்கொண்டு உண்மையைக் கண்டறியும் தூய்மையைத் தேடிப் பெறாமல்,

இது பொருத்தமில்லை, அது பொருத்தமில்லை என்று வெகு எளிதாகப் பொறுப்பற்றுப் பேசுவதில் சுவை காண்கிறோம்.

நான் அறிந்தவரையில் தம்பி! இது பொருத்தமில்லை, அது பொருத்தமில்லை! என்ற பேச்சு கிளம்பும் அளவிலும் வேகத்திலும்,இது பொருத்தம்! அது பொருத்தம்! என்று கூறப்படும் பேச்சின் அளவும் வேகமும் குறைவு,

இந்த மங்கை நல்லாளுக்குப் பொருத்தமானவன் இன்னான் என்றோ,

இந்தக் காரித்தை முடித்திடப் பொருத்தமானவன் இவன் என்றோ,

இதனை முடித்திட இந்த வழிதான் பொருத்தம் என்றோ,

இதற்கு இந்த நாள்தான் பொருத்தம் என்றோ

கூறிடும் போக்கினர் அதிகம் இருப்பதில்லை, நடைபெற்றான பிறகு, பொருத்தமில்லை என்று கூறுவோர் மிக அதிகமான எண்ணிக்கையினர். நடைபெற ஏற்பாடாகிவிட்டது என்பதனை அறிந்த பிறகு, பொருத்தமில்லை என்று கூறுபவர்கள் அதற்கு அடுத்த அளவினர். பொருள் தெரிகிறதா தம்பி!

இதற்குப் பொருத்தம் இதுதான்

என்று முன்னதாகச் சொல்லிடும் பொறுப்பினரின் எண்ணிக்கை மிக மிகக் குறைவு. பொருத்தம் இல்லை என்று முடிந்துபோன, அல்லது முடியப் போகிறபோது சொல்லிவைக்கும் பொறுப்பு ஏற்காதாரின் எண்ணிக்கை மிக அதிகம். இடையில் மற்றோர் வகையினரும் உண்டு,

பொருத்தம் எது என்று சொல்ல என்னால் முடியாது; ஆனால், இது பொருத்தமில்லை என்பது என் அபிப்பிராயம்.

என்று, கெம்பீர நடையில் பேசித் தட்டிக் கழித்துவிடுபவர்!

இதற்கு நான் பொருத்தமானவன் அல்ல! --

தம்பி! இந்தப் பேச்சு உன் காதிலே விழுந்ததுண்டா! ஆம்! என்கிறாயா!! நாடக மேடையில் கேட்டதைச் சொல்லாதே! வாழ்க்கையில் மிகமிகக் குறைந்த அளவுதான், இத்தகைய பேச்சு; அதிலே பாதி, தன்னடக்கத்தின் விளைவு; மற்றோர் பகுதி, இதற்கு உங்களைவிடப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும் என்று சொல்லமாட்டார்களா என்ற ஆவலுடன் பிணைக்கப்பட்ட பேச்சு! உண்மையாகவே, உள்ளத்திலிருந்து இந்தப் பேச்சு வருகிறது என்றால், அது ஆயிரத்தில் ஒருவன்கூட அல்ல, இலட்சத்தில் ஒருவன் என்றுதான் சொல்லவேண்டும்.

பொதுவான எண்ணம், உள்ளத்திலே பாதி உறக்கநிலையில் உள்ள எண்ணம், ஒவ்வொருவருக்கும், எதற்கும் பொருத்தம் நமக்கு உண்டு என்பதுதான். அச்சம், கூச்சம் தடுப்பதால் அனைவரும் இதனைச் சொல்லுவதில்லை, ஆனால், மிகப் பலருடைய மனத்திலே இந்த எண்ணம் இருக்கத்தான் செய்கிறது.

இந்த எண்ணத்தைத் துணைக்கொண்டு, தகுதியையும் திறமையையும் பெற்றிடப் பயிற்சி பெற்று, நிலையை உயர்த்திக்கொண்டால், நல்லது. அனால், இந்த எண்ணத்தை மட்டும் கட்டிப் புரண்டபடி தகுதி, திறமை பெறப் பயிற்சியும் பெறாமல், என்னை ஏன் இதற்கு அமர்த்தவில்லை, இந்த வேலையினை என்னிடம் ஏன் ஒப்படைக்கவில்லை, நான் தானே இதற்குப் பொருத்தமானவன் என்று கொதிப்படைந்து கூவி, வாய்ப்புத் தரப்படவில்லை என்று வேதனை அடைந்து, தராததற்காக அனைவரிடமும் வெறுப்புக் காட்டிடத் தொடங்கினால், பொல்லாத மனநோயால் பீடிக்கப்பட்டு, உள்ள திறமையும் அழிந்து உருக்குலைந்து போய்விடும் நிலை எற்பட்டுவிடும், அவ்விதம் ஆகிவிட்டவர்களைக் கண்டுமிருக்கிறேன்.

இதற்கு இது பொருத்தம் என்று கண்டறிவதற்கு, எந்த இரண்டுக்கும் பொருத்தம் இருக்கிறதா என்று கண்டறிய விரும்புகிறோமோ, அந்த இரண்டு பற்றியும் முழுவதும் முழு அளவிலும் தெரிந்திருக்கவேண்டும்.

தெரிந்திருக்க வேண்டும் என்று நான் கூறுகிறபோது தம்பி! தெளிவு இருக்கவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறேன் – ஓ! தெரியுமே! என்ற வழக்கமாகச் சொல்லிவிடுகிறோமே, அந்த முறையிலே அல்ல.

அவனுக்கும் – அவளுக்கும் பொருத்தம் இருக்கிறதா என்று கூறுவதற்கு, முதலில் அவனைப் பற்றியும் அவளைப் பற்றியும் முழுவதும் தெளிவாகத் தெரிந்திருக்கவேண்டும்

தோற்றத்தை மட்டும் கண்டுவிட்டு, தெரிந்துவிட்டதாகக் கூறிவிடுவது சரியல்ல.

பிறர் கூறக்கேட்டு, அவர்களின் இயல்வு, நிலை, நினைப்பு குறித்து அறிந்துவிட்டதாக எண்ணிக்கொண்டு, அடிப்படையற்ற அந்த அறிவை அளவு கோளாகக் கொண்டு பொருத்தம் உண்டா இல்லையா என்று கூற முற்படுவது பேதைமை.

அஃதேபோலத்தான் மற்ற எதுபற்றிய பொருத்தம் குறித்த கருத்தளிப்பதற்கும்.

மணவாழ்க்கையில் பொருத்தம் அமைந்து அந்தப் பொருத்தம் காரணமாக இல்லற இன்பம் அமைவது, வெறும் உடல் தோற்றத்தின் காரணத்தால் மட்டுமல்ல, உடல் தோற்றத்தின் பொருத்தம் தேவையேயி்ல்லை என்று நான் கூறவில்லை; கண்படைத்தவர் எவரும் கூற மாட்டார்கள். உடல் தோற்றத்திலே பொருத்தம் இருக்கவேண்டும். ஆனால், அந்தப் பொருத்தம் வாழ்க்கை மாளிகையின் நுழைவு வாயில் அவ்வளவே – நுழைவு வாயில் வேலைப்பாடு மிகுந்ததாக மட்டும் இருந்தால் போதாதல்லவா! அதுபோலத்தான் தோற்றம் வனப்பானதாக இருப்பதும்.

இந்த வனப்பு – அல்லது கவர்ச்சி என்பதற்கு ஒவ்வொருவருக்கும், அவரவர்களின் இயல்பு, அறிவு ஆகியவற்றினுக்கு ஏற்ப ஒரு இலக்கணம் அமைகிறது.

சோகை என்று ஒருவர் கருதும் முகத்தோற்றம், பளிங்கு நிறமாக மற்றொருவருக்குத் தோன்றக்கூடும்! எலும்புக்கூடு என்று ஒருவர் ஏளனமாகப் பேசி இருக்கக்கூடும், மற்றொருவரின் பூங்ககொடியை!! ஆணவம் என்று ஒருவருக்குத் தென்படும் பேச்சு கெம்பீரம் என்றாகிவிடக்கூடும் மற்றொருவருக்கு, பகட்டு என்று கூறுவார் ஆடை அலங்காரம் கண்டு ஒருவர், நவீனமுறை என்று அதனைப் பாராட்டுவார் மற்றொருவர்! இதற்கெல்லாம் தம்பி! ஒரு திட்டவட்டமான இலக்கணம் கிடையாது. ஆளாளுக்கு மாறும்! ஒரே ஆளுக்கே வேளைக்கு வேளை மாறுகிறதே! பார்க்கிறோமே!!
பார்த்தால் பசி தீரும் என்கிற பருவம் மாறிவிடுவதையும், தொட்டேன்! கெட்டேன்! என்று பேசும் பருவம் தோன்றுவதையும், கதைகளில் மட்டுந்தானா காண்கிறோம்? வாழ்க்கையில் இத்தகைய படப்பிடிப்புகள் பல உள்ளன.

தம்பி! மணவாழ்க்கையின் பொருத்தம், மணவாழ்க்கையில் ஈடுபடும் அந்த ஒருவர் உய்த்து உணரத்தக்கது; பிறர் கண்டு அறிவிப்புத் தரத்தக்கதல்ல.

உய்த்து உணரத்தக்கது மட்டுமல்ல, தொடர்ந்து முயன்று முயன்று, இடையிலே முளைத்திடும் இன்னல் களைந்து பிறகு கன்னல் சுவை பெறுவது அல்லது கிடைப்பதனைக் கன்னல் சுவை எனக் கொள்வது என்ற முறையில் அமைந்துள்ளது, வாழ்க்கைப்பயணம். அது பிறர் கண்டதும் இன்ன விதமாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்து அறிவித்துவிடக் கூடியதல்ல. வாழ்க்கைப் பயணத்தின்போது எத்தனை எத்தனையோ சோதனை ஏமாற்றங்கள், புன்னகை, பெருமூச்சு, கண்ணீர், இணைப்பு, பிணைப்பு, அணைப்பு என்று பலப்பல! இவ்வளவும் கணக்குப் பார்த்து, பொருத்தம் காணவேண்டும்! யார் கணக்கேட்டுககு உரியவர்களோ அவர்களாலேயே எளிதாகக் கண்டுபிடிக்க முடியாத ஒன்று; அந்நிலையில், காகிதப் பையில் வைத்தளிக்கப்படும் தாம்பூலத்தை வாங்கிக் கொண்டுபோக வந்திருப்பவர்கள், துளியும் பொருத்தம் இல்லை என்று சொல்லிவிடுவது, பொருள் உள்ளதாக முடியுமா!!

இருபொருள்களின் தன்மையும் ஒன்றுக்கொன்று சிறப்பளிக்கத் தக்கன என்கிறபோது, பொருத்தம் இருக்கிறது என்று கூறலாம்.

இதற்கு அதுதேவை, துணை என்று எற்படும்போது பொருத்தம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம்.

இதுவும் அதுவும் ஒன்று கூடினால், அந்த இரண்டும் தனித்தனியாக இருக்கும்போது கிடைத்திடக் கூடிய பயனைவிட மிகுதியான பயன் கிடைத்திடும் என்பது புரிகிறபோது, இதற்கு அது பொருத்தமாக இருக்கும் என்று கூறிடலாம்.

ஆக, இருவேறு இயல்புகள், தன்மைகள், திறமைகள் தகுதிகள் ஒன்று கூடி, மொத்தமாக இயங்கி, அவ்விதம் இயங்குவதன் காரணமாக, புதிய பயன் கிடைத்திடும்போது, அந்த இரண்டுக்கும் பொருத்தம் அமைந்திருக்கிறது என்கிறோம்.

பொருத்தமான நிலம் – பொருத்தமான விதை! பொருத்தமான பண்ணைமுறை! - நிரம்பிய அறுவடை!

இந்த நிலத்திற்கு, சம்பாதான் பொருத்தம் என்கிறோம்.

கரிசல் பூமி – பருத்திப் பயிருக்குப் பொருத்தமானது என்கிறோம்.

மணலும் செம்மண்ணும் கலந்த பூமி – முந்திரிக்குப் பொருத்தமான இடம் என்கிறோம்.

ஊர்க்கோடியில் உள்ள வயல் – இரண்டாம் போகம் பயிரிடப் பொருத்தம் இல்லை என்கிறோம்.

இவ்விதம் கூறிட, மண்ணின் இயல்பும் பயிரின் தன்மையும், இவைகளின் கூட்டு என்னென்ன விதமாக அமைய முடியும் என்ற வகைபற்றிய அறிவும், என்னென்ன வகையான கூட்டு என்னென்ன விதமான பலனைத் தருகிறது என்பதுபற்றிய ஒப்பிட்டுக் கண்டிடும் அறிவும் தேவை.

வாழைக்கு ஏற்ற வயலில் வரகரிசி தூவிடலாம், பருத்திக்கேற்ற காட்டில் பழச் செடிகளை நட்டுப் பார்க்கலாம் – ஆனால், பொருத்தமற்றது என்பது அறுவடையில் தெரிந்துவிடும்!

பொருத்தம் அறிவதற்குத் தேவைப்படும் அறிவினைப் பெறுவது எளிதானதுமல்ல. எல்லாத் துறைகளிலும் பொருத்தம் எவ்விதம் இருக்கிறது என்பதனை அறிந்து கொள்ள இயலும் என்று கூறுவதும் சரியல்ல!

வயலுக்கும் பயிருக்கும் இருக்கக்கூடிய பொருத்தம் அறிந்து கூறிடக்கூடிய உழவர் பெருமக்களிடம் மருத்துவத்துறை குறித்தோ, பொருத்தம் கேட்டால் என்ன கிடைக்கும்?

பொருத்தம் பற்றிய அறிவு பெறுவதும் தெளிவளிக்கும் பயிற்சி பெறுவதும் கடினம் என்பதுடன், ஒருவரிடம் எல்லாத் துறைகள் குறித்தும் பொருத்தம் கூறிடத் தக்க திறமை இருக்கும் என்று எதிர்பார்ப்பது மிகமிகத் தவறு என்பதனையும் தெரிந்துகொள்ள வேண்டும்.

இவரே இதற்குப் பொருத்தமானவர் என்று ஒருவரைக் கண்டறிவதே கடினம் என்கிறபோது, இவரே எல்லாவற்றுக்கும் பொருத்தமானவர் என்று கூற முற்படுவது, எங்ஙனம் இயலும்?

எல்லாம் எனக்குத் தெரியும் என்று சிலர் கூறலாம்; அதனை நம்பி அவரிடம் எல்லாவற்றையும் ஒப்படைக்க முன்வருவார் உண்டா! இவருக்கு எல்லாம் தெரியுமாம்! - என்ற ஏளனப் பேச்சுக்குதான் அவர் பயன்படுத்தப்படுவார்.

பொருத்தம் என்பது தம்பி! பொருந்துவது – சரியாகச் சேருவது – கூடுவது – பயன் தரத்தக்க விதத்தில் கலப்பது – எனும் பொருள் தருவது.

தண்ணீரில் எண்ணெய் பெய்துவார் – பொருத்தமில்லை – எண்ணெய் மேலே மிதக்கிறது; தனியாகத் தெரிகிறது; தண்ணீருடன் கலந்துவிட மறுக்கிறது; பொருத்தம் இல்லை.

பொருத்தம் இல்லாதது தெரிவது மட்டுமல்ல, பொருத்தமில்லாத இரண்டினை – தண்ணீரையும் எண்ணெயையும் நாம் வேண்டுமென்றே ஒன்றாகக் கலக்கியதால், எண்ணெய் எரிபொருளாகும் இயல்பினை இழந்துவிடுகிறது. பயன் கெடுகிறது; தண்ணீர் பருகிடப் பயன்படுவதில்லை; இயல்பு கெட்டொழிகிறது; இந்த இரண்டின் இயல்புகள் கெட்டபிறகு, பொதுவான, பயன்தரத்தக்க ஒரு புதிய இயல்பு கிடைக்கிறதா என்று பார்த்தால், இல்லை!!

பாலில் கலக்கும் தண்ணீர் அவ்விதம் இல்லையே – கலந்துவிடுகிறதே; தனித்தனி தெரிவதில்லையே; பருகிடத்தக்கது என்ற இயல்பும் கெடுவதில்லையே என்று வாதாட முயல்வார்கள் – வாதாடுவதில் சுவை காண்பவர்கள். சுவையான வாதம் தம்பி! சூடு ஏறுகிறவரையில்; பாலுடன் கலந்த தண்ணீர், ஆவியாகத் தனியே பிரிந்து, சொல்லாமல் கொள்ளாமல் மேலே பேயேவிடுகிறது தெரியுமல்லவா, பாலைக் காய்ச்சும்போது சூடு கொடுத்ததும், பொருத்தமற்ற கூட்டு, உடைபட்டுப் போய்விடுகிறது.

எண்ணெய் என்பதனை மட்டுமேதான் எடுத்துக்கொள்ளேன் தம்பி!

விளக்கெரிக்கப் பயன்படும் எண்ணெய் யாவும் யந்திரங்களை இயங்கவைக்க முடிகிறதா! டீசலை ஊற்றி இயங்கவைக்க வேண்டிய யந்திரத்தில் விளக்கெண்ணெய் ஊற்றுவாரும், விளக்கெண்ணெய் ஊற்ற வேண்டிய அகல்விளக்கில் பெட்ரோலை ஊற்றுவாரும் உண்டா!! பொருத்தம் இல்லை என்பது தெரிகிறது.

ஒரு பொருளுடன் மற்றோர் பொருள் கூடிப் பயன்தர முடியுமா என்பதனைப் பொறுத்து, பொருத்தம் இருப்பதனை அறிந்துகொள்ளலாம்.

விஞ்ஞானம் பொருத்தமற்றது என்று நாம் கருதிவந்த பொருள்களை, இயல்பினை மாற்றியோ, திருத்தி அமைத்தோ, பொருத்தம் உள்ளது ஆக்கித்தர பயன்படுகிறது.

இயற்கையான இயல்பின்படி இருவேறு பொருள்களின் கூட்டு பயன் தரத்தக்கதாக இருந்திடும்போது, பொருத்தம் இருக்கிறது என்ற கூறிடலாம்.

வழிவழி வந்த அறிவின் துணைகொண்டும், கண்டு கண்டு பெற்ற தெளிவின் துணைகொண்டும், இயற்கைப் பொருள்களிடையே உள்ள பொருத்தம் அல்லது பொருத்தமற்ற தன்மை ஆகியவற்றினை, சராசரி அறிவுள்ளவர்களும் அறிந்து கூற முடிகிறது.

வெங்காயத்துண்டும் பச்சை மினகாயும் கடித்துக் கொண்டு கூழ் சாப்பிட்டால் ஒரு பொருத்தம் இருக்கிறது என்பதும், அதே பச்சை மிளகாய் பால் சாப்பிடுவதற்குப் பொருத்தமாக இராது என்பதும், தெரிந்து கொள்ள பல்கலைக்கழகம் போகவேண்டுமா; பட்டி தொட்டியெல்லாம் தெரிந்த அனுபவ அறிவு, அது மார்கழி மாதம் பயன்படும் கம்பளிப்போர்வை கோடையில் பொருத்தமில்லை என்பதனைக் கூட்டம் கூட்டியா சொல்லவேண்டும்.

கூடுமானவரையில் இயற்கைப் பொருள்களுக்குள்ளே இருக்கக் கூடிய பொருத்தம் பற்றிய அறிவும் தெளிவும் வியந்து பாராட்டத்தக்க அளவு பரவி இருக்கிறது; நிலைத்து இருக்கிறது.

மக்களுக்குள்ளே ஏற்படக்கூடிய பொருத்தம், செயலுக்கும் செய்பவனுக்கும் இருந்தாக வேண்டிய பொருத்தம், செயலுக்கும் செயல்படவேண்டிய காலத்துக்கும் உள்ள பொருத்தம், செயலுக்கும் செயல்முறை, கருவி ஆகியவற்றுக்கும் உள்ள பொருத்தம் ஆகியவை குறித்த அறிவினைப் பெறுவதும், தெளிவடைவதும், போதுமான அளவிலோ, தரத்துடனோ, வளர்ந்திடவில்லை; வளர்ந்தாக வேண்டும்.

கோட்டை, எதிரியிடம் சிக்காதிருக்க என்பதும், அகழ் கோட்டைக்கு அரணாக என்பதும், காட்டுவழி எதிரி அறியாமல் அவன்மீது பாய்ந்திட என்பதும், மலைச்சரிவு, பள்ளத்தாக்கு, அற்றோரம், நகர்ப்புறம், சதுப்புநிலம் எனும் இன்னபிற இட அமைப்புகள் ஒவ்வோர் வகையான போர் முறைக்கு ஏற்றதென்பதும், நெடுங்காலத்துக்கு முன்பிருந்தே தமிழகம் பெற்றிருந்த நுண்ணறிவாகும்.

வீசுவதற்கு வாள், எறிவதற்கு ஈட்டி, குத்திக் குடலெடுக்க வேல், எய்வதற்கு அம்பு, நொறுக்குவதற்குப் பெருந்தடி, சுழற்றி அடிப்பதற்குக் கம்பு, வாளிட உறை, அம்புகளுக்குத் தூணி, தடுப்புக்குக் கேடயம், உடலுக்குக் கவசம் – எனும் இந்தப் பொருத்தங்கள் நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பிருந்தே தமிழகம் தெரிந்து வைத்திருந்தது.

கோட்டைகளைத் தாக்கிட யானைப் படையையும், விரைந்து சென்று எதிரிப்படையைப் பிளந்தெறியக் குதிரைப் படையையும் பயன்படுத்துவதே பொருத்தமான போர்முறை என்பதைப் பழந்தமிழகம் தெளிவாகத் தெரிந்துவைத்திருக்கிறது.

எதிரியின் போக்கைக் கண்டறிய, உளவுத்துறை பொருத்தமானது என்பதுபற்றிய நுண்ணறிவு நிரம்ப இருந்திருக்கிறது.

போர் முறை, போர்க் கருவிகள் என்பவைகளுடன் போருக்கான காலம், எந்ததெந்தக் காலத்தில் என்னென்ன விதமான போர் முறையை மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும் என்பது பற்றிய நேர்த்தியான அறிவுத் தெளிவு மிகுந்திருந்திருக்கிறது.

காலம், இடம், முறை இவைகளைப் பொறுத்து ஒரு செயலின் வெற்றிக்கான பொருத்தம் அமைகிறது என்ற அறிவுத் தெளிவும், அந்த அறிவுத் தெளிவினை எல்லாத் துறைகளிலும் பயன்படுத்திய திறனும் கொண்டவர்களாகத் தமிழர் விளங்கி வந்தனர்.

பொருத்தமான காலம், இடம், முறை ஆகியவற்றினைத் தேர்ந்தெடுத்தும், வெற்றி கிட்டாமல் போவதுண்டு; அதனால், காலம், இடம், முறை பற்றிய பொருத்தம் பார்க்கவே தேவையில்லை என்று முடிவு கொள்வது பெருந்தவறு. பொருத்தம், பொருத்தமாக அமையவில்லை என்று மட்டுமே கொள்ளமுடியும்.

அதுபோலவே, தம்பி! ஏதேனும் ஓர் துறையில் எவரோ ஒருவருக்கு ஏதாவதொரு வகையான வெற்றி கிட்டிவிட்டதும், அந்தத் துறையில் அவரே பொருத்தமானவர் என்றோ, அவருடைய முறைகளே பொருத்தமானவை என்றோ தீர்மானித்துவிடுவதும் சரியல்ல.

பல துறைகளிலே பலருக்குக் கிடைத்திடும் வெற்றி, பொருத்தத் தினாலேயே அமைந்து விடுவதுமில்லை.

தம்பி! இவ்விதம் நான் கூறுவதால், அதிர்ஷ்டம், ஜாதக பலன் என்பன போன்றவைகளை நம்புகிறேன் என்றோ, நம்பச் சொல்கிறேன் என்றோ தவறாக எண்ணிக் கொள்ளாதே!

எந்தத் துறையிலும், போர்த் துறை எனினும், வாணிபத் துறையெனினும், அரசியல் துறையெனினும், இல்லறத் துறையெனினும், இருவேறு சக்திகள் ஒன்றுடன் மற்றொன்று கொண்டிடும் தொடர்பின் விளைவாகவே, வெற்றியோ தோல்வியோ ஏற்பட முடியும். தொடர்பு கொள்கிற இருவேறு சக்திகளும், இடம், காலம், முறை ஆகியவற்றின் பொருத்தமறிந்து செயல்படும்போது, இரு சக்திகளின் ஒன்றின் முறைப் பொருத்தம் மற்றொன்றின் முறைப் பொருத்தத்தை மிஞ்சக் கூடியதாக அமைந்துவிடுமானால், வெற்றி அந்தப் பக்கம் இருந்திடுமல்லவா?

சர்க்கரை மூட்டைகளை இந்த மாதம் இன்ன விலைக்கு வாங்கி இன்ன மாதத்தில் விற்றால் இவ்வளவு இலாபம் கிடைக்கும் என்று சாந்தப்பன் திட்டம் வகுத்திருப்பான் – இடம், காலம், முறை ஆகியவை பற்றிய பொருத்தத்தைப் பார்த்து.

ஆனால், சாத்தப்பன், எந்தக் கந்தப்பனிடம் மூட்டைகளை விற்கலாம் என்று எண்ணித் திட்டமிடுகிறானோ, அந்தக் கந்தப்பன் இன்ன மாதத்தில் வாங்காமலிருந்துவிட்டால், நாலு மாதத்திற்குப் பிறகு தன்னாலே சரக்கு விலை விழும் என்று ஒரு கணக்குப் போட்டுப் பார்த்து, சாத்தப்பன் விற்கிறபோது, சரக்கு இப்போதைக்குத் தேவையில்லை என்று தீர்மானித்து விடுவானானால் சாத்தப்பன் போட்டிருந்த திட்டம் கெட்டுவிடுகிறது.

விந்தை இதிலேகூட இல்லை, சாத்தப்பன் – கந்தப்பன் எனும் இருவரன்றிப் பிறிதோரின் நடவடிக்கை காரணமாகவும், சாத்தப்பன் – கந்தப்பன் எனும் இருவருக்குள் அமையவேண்டிய வாணிபத் தொடர்பு கெட்டுவிடக்கூடும்.

திட்டமிட்டபடி சாத்தப்பன் சரக்கினை விற்க முனைகிறான். கந்தப்பனும் வாங்க வருகிறான். ஆனால், திடீரென்று சர்க்கார் உத்திரவு ஒன்று கிறம்புகிறது – இன்னும் ஆறு திங்களுக்கு, தனிப்பட்ட வாணிப முறைப்படி சர்க்கரை விற்பனை நடத்தப்படக் கூடாது என்று. அப்போது? சாத்தப்பன் திட்டம், கந்தப்பனால் அல்ல, பிரிதோர் சக்தியால் நடவடிக்கை காரணமாகக் கெட்டுவிடுகிறது.

இவைகளைக் கொண்டு, திட்டமிடுவதே கூடாது என்ற முடிவுக்கும் வருவதல்ல, திட்டமிட்டாலுங்கூடச் சில சூழ்நிலைகள் கெடுதலை உண்டாக்கிவிடும் என்ற பாடம் மட்டுமே பெறவேண்டும்.

வெற்றி கிடைத்திடப் பெற்றவர்களெல்லோரும், பொருத்தமான முறையிலே பணியாற்றியதாலேயே வெற்றி பெற்று விடுவார்கள் என்று பொருள் கொண்டிடுவது, கானலை நீரென நம்பிடுவதாகி விடும்!

சிறுகதையொன்று நினைவிற்கு வருகிறது. ஒரு அலுவலகத்தில் நீண்டகாலமாகப் பணியாற்றி வருகிறார் ஒருவர்; போதும் இத்தனை ஆண்டுகள் பணியாற்றியது என்று கருதுகிறார்; வேலையை விட்டுவிட வேண்டும், வீட்டோடு ஓய்வாக இருந்திட வேண்டும் என்று விருப்பம். இதனை அவருடைய இல்லத்தரசி ஒப்பவில்லை. அதனால் கூடச் சங்கடம் அதிகம் இல்லை. அலுவலக உரிமையாளர் இவர் விலகுவதைத் துளியும் விரும்பவில்லை. விலகுவதாகக் கூறியபோதெல்லாம் மறுத்து வந்தார். என்ன செய்வதென்று எண்ணிப் பார்த்து எண்ணிப் பார்த்து, அலுவலக உரிமையாளரே தன்னை விலக்கிவிடும்படியான சூழ்நிலையை உண்டாக்க வேண்டுமென்று திட்டமிட்டு, அதற்கோர் வழி கண்டுபிடித்தார்.

ஒரு மாலை, அலுவலக உரிமையாளரின் தனி அறைக்கு வெளியே நின்று கொண்டு, வாய்க்கு வந்தபடி அலுவலக உரிமையாளரை ஏசலானார்.

முதலாளியாம், முதலாளி! முகத்தைப் பார், முகத்தை! இவனைப்போய் என் முதலாளி என்று கூறவேண்டுமாம்! மோசக்காரன்! நயவஞ்சகன்! நல்லவன் போல் வேடம் போட்டுக்கொண்டு ஊரை ஏய்க்கிறான். நானா ஏமாறுவேன்! உன் கபட நாடகம் எனக்கு நன்றாகத் தெரியும்!

அலுவலக முதலாளியைத் தாறுமாறாக ஏசும் குரல்கேட்டு அலுவலகப் பளியாளர் பலரும் வந்து கூடினர். அவர்களுக்கு ஒரே வியப்பு! திகைப்பு! முதலாளியின் நன்மதிப்பைப் பெற்றவர், நீண்ட பல ஆண்டுகளாகப் பணியாற்றி நல்ல பெயர் பெற்றவர். இவரா முதலாளியை இப்படி ஏசுகிறார். குடிவெறியா! மூளைக் குழப்பமா! என்றெண்ணித் திகைத்தனர்.

கேவலமாக ஏசியதுடன் நிற்கவில்லை! கையில் கொண்டு வந்திருந்த கணக்கு ஏடுகளை, உள்ளே நார்காலி மீது உட்கார்ந்து கொண்டிருந்த முதலாளி மீது வீசலானார். அலுவலகப் பணியாளர்கள் பதறிப்போய், வேண்டாம் வேண்டாம்! என்று கூவினர். தடுத்துப்பார்த்தனர், முடியவில்லை. கணக்கு ஏடுகள், உள்ளே உட்கார்ந்திருந்தவரின் தலையிலே விழுகின்றன, மூக்குக் கண்ணாடி நொறுங்குகிறது.

அக்கிரமக்காரன்! அறியாயக்காரன்! பிடித்து உதையுங்கள், போலீசைக் கூப்பிடுங்கள்! என்று அலுவலகப் பணியாளர்கள் கூவுகின்றனர். அருகே செல்ல அவர்களுக்கு அச்சம்! வெறி தலைக்கேறிவிட்டது; அதனால்தான் முதலாளியைத் தாக்குகிறான்; நாம் அருகே சென்றால் என்ன செய்வானோ; கத்தி வைத்துக்கொண்டிருப்பானோ என்னவோ! இப்படியெல்லாம் பீதி கொண்டனர்.
என்னையா அக்கிரமக்காரன் என்கிறீர்கள். அட! பைத்தியக்காரர்களே! அக்கிரமக்காரன் உள்ளே இருக்கிறான், உள்ளே! ஒய்யாரமாக உட்கார்ந்துகொண்டிருக்கிறான், நாற்காலியில்; அவனைப் பிடித்து உதையுங்கள், பலமாக! போலீசையா கூப்பிடச் சொல்கிறீர்கள், கூப்பிடுங்களேன்! போலீஸ்! வந்தால்தானே தெரியும்! இந்தப் புரட்டனுடைய விஷயம் அம்பலமாகும். கூப்பிட்டுக்கொண்டு வாருங்கள் போலீசை! ஓடுங்கள்! ஓடுங்கள்! போலீஸ்! போலீஸ், உடனே போலீஸ்!

இவ்விதம் கூவுகிறார். சந்தேகமே இல்லை ஆசாமிக்குப் பைத்தியமேதான் பிடித்துவிட்டது என்று அனைவரும் முடிவு செய்தனர்.

பிறகு என்ன நடந்தது என்கிறாயா, தம்பி! என்ன நடக்கும் என்று எதிர்பார்க்கிறாய்! அவரைப் பிடித்துக் கட்டிப்போட்டு நல்ல டாக்டரிடம் காட்டுவார்கள்; பித்தர் விடுதியில் சேர்ப்பார்கள் என்றுதானே.

அதுதான் இல்லை! தம்பி! அத்தனை வெறிச் செயலைச் செய்தவனுக்கு, அதே அலுவலகத்தில் பதவி உயர்வு, பாராட்டு, பரிசு, விருந்து கிடைத்தது.

எப்படி? எப்படி முதலாளியைத் தாக்கினார், அவருக்கா பதவி உயர்வு, பட்டம், பரிசு என்றுதானே கேட்கிறாய். கிடைத்தது! ஏன் எப்தனை அடுத்த கிழமை தெரிவிக்கிறேன்.

அண்ணன்,
அண்ணாதுரை
17.10.1965


முகப்பு | இலக்கியம் | அரசியல் | வரலாறு | புகைப்படங்கள் | பேரவை | தொடர்புகொள்ள

Website Designed by R.Sembian, Anna Peravai