தை. . . தை. . .
என்று. . .
டாக்டர் அண்ணா பரிமளம்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மனிதா நீ தை . . . தை என்று மகிழ்ந்து ஆடியது
போதும்!
இனி நீ சிலரை உன் காலடியில் போட்டு தை . . . தை
என்று மிதிக்க வேண்டும்!
யாரை?
இதோ பட்டியல்:
விஞ்ஞானம் நமக்களித்த அறிவியல் படைப்புகளை அழிவுக்குப் பயன்படுத்தும்
ஆதிக்க வெறியர்களை!
ஒழுக்கம், பண்பு, நாகரிகம் இவற்றையெல்லாம் குழிதோண்டிப்
புதைத்து விட்டு - சன நாயகத்தைக் கேலிக் கூத்து ஆக்கும் அரசியல்வாதிகளை
. . .!
மதம், சாதி இவற்றில் மனித சமுதாயத்தைச் சிக்க
வைத்துவிட்டு, அதிலே குளிர் காய்கின்ற மதவாதிகளை!
உணவுப் பொருள்களில் கலப்படம் செய்து மனித வாழ்வுக்கு
வேட்டு வைத்து வரும் வியாபாரிகளை!
சட்டம் - காவல் - மருத்துவம் - கல்வி - அரசு திருவாசகம்
- இப்படி பல துறைகளில் மலிந்து கிடக்கும் புல்லுருவிகளை!
சமுதாய நாற்றங்காலில் முள் செடிகளாய் முளைத்துக்
கிளைக்கும் அழிவுச் சக்திகளை!
இன்னம் - பொதுமக்கள் புழுங்கிக் கலங்க அவர்களைச்
சிறை செய்வதுபோல் சாலை மறியல் செய்யும் சாத்வீக(?) தொண்டர்களை!
வெற்றி விழா - வீர உலா - பிறந்தநாள் விழா - நடத்திப்
போக்குவரத்தைப் பாதிக்கச் செய்து, எண்ணெய், காய்கறி போன்ற உணவுப்
பொருள்களின் தட்டுப்பாட்டை அதிகமாக்கி, விலைவாசி ஏற்றத்துக்கு
அடிகோலிவிட்டு - வறுமைக்கோட்டிற்குக் கீழே உழன்று வாடும் மனித
உருவங்களைப் பார்த்து சிக்கனம், சேமிப்பு இவையே நாட்டுயர்வு! என்ற
போதனை புரியும் போதிமர குத்தகைகாரர்களை!
மனித தெய்வங்களின் பெயர்களை எச்சரித்துக்கொண்டே
மனிதர்களை மாடாய் நடத்தும் மனித மிருகங்களை!
செய்திகளில் சாயம் பூசுவது, போதை ஏற்றுவது - போன்ற
கொடுமைகளைக் கூசாமல் இழைக்கும் - பத்திரிகையாளர்களை விலை எழுத்தாளர்களை
பொய்பேசி நத்திப் பிழைக்கும் கவிஞர்களை!
வெள்ளி திரையின் நிழலாட்டங்களில் மதிமயங்கிய மக்களால்
மந்தகாச வாழ்வைப் பெற்ற மந்ததாப்பு மனிதர்களை!
இவர்கள் எல்லோரையும். ஓ மனிதா,
நீ தை தை என்று. . . உன் உரமேறிய உழைக்கும் கால்களால்.....!
(டாக்டர். அண்ணா பரிமளம் - 09.01.1993 காஞ்சிநாடு
இதழ்)